Pages

Saturday 18 August 2018

பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பிராமி கல்வெட்டு வாசிக்க பயிற்சி



ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றமும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து மதுரை அருகிலுள்ள கொங்கர் புளியங்குளத்தில் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ் பிராமி கல்வெட்டுகள் வாசிப்பு பயிற்சிமுகாமை நடத்தின.

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு இப்பள்ளியின் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இடைக்காலத் தமிழ் எழுத்து கல்வெட்டுகள் படிக்க, படியெடுக்க பயிற்சி அளித்துள்ளார்.

மேலும் எட்டாம், ஒன்பதாம் வகுப்பு பயிலும் 20 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ் பிராமி எழுத்துகளை எழுதவும், படிக்கவும் பள்ளியில்  பயிற்சி அளிக்கப்பட்டது. இம்மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட சங்கத்தமிழ் பாடல்களை தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதி பயிற்சி பெற்றனர்.

வர்களில் எட்டாம் வகுப்பு ரா.கோகிலா, ச.ஜாஸ்மின், மு.சுதர்ஸன், த.சந்துரு, ஒன்பதாம் வகுப்பு ச.கவிதா, ச.சாருமதி ஆகிய ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டு கல்வெட்டுகளில் உள்ள தமிழ் பிராமி எழுத்துகளைப் படித்து பயிற்சி பெற மதுரை அருகிலுள்ள கொங்கர் புளியங்குளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

இங்கு இயற்கையான குகைத்தளத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. அக்குகையின் விளிம்புப் பகுதியில் மூன்று தமிழ் பிராமி கல்வெட்டுகள் அடுத்தடுத்து உள்ளன. இவை 2200 ஆண்டுகள் பழமையானவை. 

தமிழ் பிராமி எழுத்துகளே முதலில் தோன்றிய எழுத்து வடிவம். இதை தமிழி எழுத்துகள் எனவும் கூறுவர். தமிழி எழுத்து கல்வெட்டுகள் பெரும்பாலும் மலைக்குகைகளிலேயே உள்ளன. இராமநாதபுரம் பகுதிகளில் இவை இல்லையெனினும் அழகன்குளம், தேரிருவேலியில் நடந்த அகழாய்வுகளில் இந்த எழுத்துகள் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

மதுரையைச் சுற்றியுள்ள மலைக்குன்றுகளில் சமண முனிவர்கள் தங்கியிருந்த குகைகளில் கற்படுக்கைகள் அமைத்துக் கொடுத்தவர்கள் பற்றிய செய்திகளையே பெரும்பாலான பிராமி கல்வெட்டுகள் சொல்கின்றன.  

இக்கல்வெட்டுகளில் உள்ள தமிழ் பிராமி எழுத்துகளை பார்த்து எழுதி அதன் தற்கால தமிழ் வடிவத்தையும் எழுதினர். இக்கல்வெட்டுகள் சொல்லும் செய்தி பற்றி இம்மன்ற பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு மாணவர்களுக்கு விளக்கினார். உபறுவன், சேரஅதன், பிடன் ஆகிய ஆள் பெயர்களும், பாகனூர் எனும் ஊர்ப் பெயரும் இக்கல்வெட்டுகளில் இருந்ததை வாசித்து தெரிந்துகொண்டனர். மலை, பொன் ஆகியவற்றின் குறியீடுகள் இரு கல்வெட்டுகளில் இருந்ததையும் அவர்கள் நேரில் பார்த்து அறிந்தனர்.


நாளிதழ் செய்திகள்







No comments:

Post a Comment