Pages

Monday 29 December 2014

நெஞ்சை அள்ளும் தஞ்சையில் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பயிற்சி முகாம்







திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் தஞ்சாவூரில், “வாழும் சோழர் கோயில்கள்” என்ற தலைப்பில் பயிற்சி முகாம் 24/12/2014 அன்று நடைபெற்றது. மன்ற உறுப்பினர்கள் 74 பேர் தேர்வு செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டனர். 

     தஞ்சை பெரிய கோவில், தாராசுரம் அறிவட்டீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் ஆகிய உலக பாரம்பரியச் சின்னங்கள் “வாழும் சோழர் கோவில்கள்” என யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனால் கி.பி. 1003 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கப் பெற்று, கி.பி. 1010 ஆம் ஆண்டில் நிறைவு பெற்ற தஞ்சை பெரிய கோயில் இமயமலை போன்ற அமைப்பில்  அமைக்கப்பட்டுள்ளது. 3.66 மீட்டர் உயரம் கொண்ட லிங்க வடிவிலான சிவன், மாமன்னன் இராஜராஜனின் பெயரால் இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டார். ஏறத்தாழ 70 கி.மீ. தூரத்திற்கு வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கற்களைக் கொண்டு, 240 மீட்டர் நீளமும், 120 மீட்டர் அகலமும் கொண்ட பெரும்பரப்பில் இக்கோயில் நிர்மாணிக்கப் பெற்றுள்ளது.



சதுரவடிவிலான கருவறையின் மேல் 216 அடி  உயரம் கொண்ட  விமானம் கட்டப்பட்டுள்ளது. வாய்  அகலமான  கூம்பு வடிவ பாத்திரத்தை  கவிழ்த்து  வைத்தது  போல  இருக்கும்  இவ்விமானத்தின், உட்புறத்தை, வெற்றிடமாக  அமைத்திருப்பது  அரிய விஷயமாகும்.
இக்கோவிலின் நந்தி, ஒரே கல்லால் செய்யப்பட்டது. நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. 

இக்கோயிலில் இருக்கும் கல்வெட்டுக்கள் மூலம் சோழர்கால  தமிழகத்தின்  வரலாறு, கல்வெட்டியல், அரசியல், கட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், இசை  ஆகிய  பல்கலைகளுடன்  சமுதாயப்  பண்பியல்  மற்றும் இறைக்கொள்கை  ஆகியவற்றை அறிய முடிகிறது. மாணவர்கள் இதை நேரில் கண்டறிந்தனர். 

இங்குள்ள கல்வெட்டுகளை வாசித்து அறிந்து கொள்ளவும்,  சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ள முறைகள்,  நுணுக்கங்கள் பற்றியும் இராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் காப்பாட்சியர் சக்திவேல் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.






பின்பு தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம் கோவில்களை மாணவர்கள் பார்வையிட்டனர். இகோவில்களின்  சிறப்புகளைப் பற்றி  மன்றப் பொறுப்பாசிரியர் இராஜகுரு மாணவர்களுக்கு கூறினர். 

பயிற்சிக்குரிய ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியர் சண்முகநாதன், பட்டதாரி ஆசிரியர்கள் ராமு, கலையரசி, இடைநிலை ஆசிரியர் தமயந்தி மற்றும் மங்களேஸ்வரி, ராமதாஸ் ஆகியோர் செய்திருந்தனர். 




Thursday 18 December 2014

புராண பெருமை பேசும் தேவிபட்டினம் - வே.இராஜகுரு



இராமநாதபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது தேவிபட்டினம். 

இவ்வூரில் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள திலகேஸ்வரர் கோயில் சிவனுக்காகவும், கடற்கரை ஓரம் கடலடைத்த இராமர் கோயில் திருமாலுக்காகவும், படையாச்சி தெருவில் உள்ள உலகம்மன் ஆலயம் அம்மனுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. 

கடலடைத்த இராமர் கோயிலுக்கு எதிரில் கடல் நடுவே அமைந்துள்ள நவபாஷாணம் எனப்படும் நவக்கிரகங்கள், பாவங்கள் நீங்கவும், முன்னோர் வழிபாட்டிற்கும் மக்களால் வழிபடப்படுகிறது.

இவ்வூர் இராமாயணத்தோடு தொடர்புடையது. இராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, இங்கு கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டபோது கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் என்றும், பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன என்றும் புராணங்கள் கூறுகின்றன. இதனால் இங்குள்ள திருமால் கடலடைத்த இராமர் என அழைக்கப்படுகிறார். இக் கடலடைத்த இராமர் கோயில் நவகிரகத்துக்கு எதிரில் உள்ளது. 

இந்தியா முழுவதிலுமுள்ள 52 சக்தி பீடங்களில் இந்த ஊரில் உள்ள உலகம்மன் ஆலயமும் ஒன்றாகும். இது கடற்கரை ஓரத்தில் மிக அமைதியான சூழலில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

தேவிபட்டினத்தை கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜடாவர்மன்    சுந்தரபாண்டியன் கல்வெட்டும் கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜடாவர்மன் விக்கிரம பாண்டியன் கல்வெட்டும் முறையே இளங்கோ மங்கலமகிய உலக மாதேவிப்பட்டினம் என்றும் புறக்குடி ஆகிய ஸ்ரீவல்லபட்டினம் என்றும் குறிப்பிடுகின்றன. கி.பி. 1533 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டு தேவிபட்டினத்தை தேவிபட்டினம் என்றே குறிப்பிடுகின்றது. இம்மூன்று கல்வெட்டுகளும் தேவிபட்டினம் செவ்விருக்கை நாட்டில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. 

முதலாம் இராஜராஜ சோழனின் பட்டத்து அரசியான லோக மகா தேவியின் பெயரில் இவ்வூர் அமைக்கப்பட்டதாகக் கூறுவர். உலக மகா தேவி பட்டினம் என்பது நாளடைவில் தேவிபட்டினம் என வழங்கப்பட்டு வருகிறது.

கோபுரத்தை சிறியதாகவும், விமானத்தை பெரியதாகவும்  அமைப்பது சோழர் கால கட்டடக்கலை. இவ்வூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள திலகேஸ்வரர் கோயில் விமானம் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளதால் அது சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இங்கு கடலடைத்த இராமர் கோயில் உள்ளது. இது நவகிரகத்துக்கு எதிரில் உள்ளது.  

இவ்வூரின் பெயரோடு தொடர்புடைய உலகம்மன் (உலகமாதேவி) கோயில் படையாச்சி தெருவில் உள்ளது. பட்டினம் என்பது கடற்கரையோரம் உள்ள நகரை குறிக்கும் சொல். 

தேவிபட்டினம் கடற்கரையின் சதுப்பு நிலப் பிரதேசத்தில் அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. இவ்வகை அலையாத்தி காடுகள் இவ்வூர் முதல் கிழக்கு கடற்கரை முழுவதும் பரவி உள்ளது.