Pages

Thursday 18 December 2014

தேரிருவேலியின் தொன்மைச் சிறப்புகள் - வே.இராஜகுரு



          ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் உத்திரகோசமங்கை அருகில் உள்ள ஊர் தேரிருவேலி. இவ்வூரிலிருந்து 2 கி. மீ தூரத்தில் குண்டாறு ஓடுகிறது. 
     இவ்வூரின் வரலாற்றுக்குச் சான்றாக இலக்கியக் குறிப்புகள், கல்வெட்டுகள் தும் கிடைக்கவில்லை. எனினும் தமிழ்நாடு தொல்லியல் துறையினர் இங்கு  மேற்கொண்ட மேற்பரப்பாய்வில் நுண்கற்கால கருவிகள் செய்வதற்கான மூலக்கற்கள், ரோமானிய ரௌலட்டட் பானை ஓடுகள் கிடைத்திருப்பது வ்வூரின் பழமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. 
          இவ்வூரின் வடமேற்கில் உள்ள பெரிய ஏரி இருவேலி கண்மாய் என அழைக்கப்படுகிறது. இக்கண்மாயின் பெயரால் இவ்வூர் தேரிருவேலி என அழைக்கப்பட்டிருக்கலாம். அல்லது உத்திரகோசமங்கை தேர்த்திருவிழாவிற்காக இங்கு இருவேலி நிலம் அளிக்கப்பட்டு, அதனால் தேரிருவேலி என அழைக்கப்பட்டிருக்கலாம். 
          இங்கு தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில், பானை ஓடுகள், சங்கு வளையல்கள், மான் கொம்புகள், முதுமக்கள் தாழி, தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. 
          இங்கு கிடைத்த பானை ஓடுகளில் 67 வகையான குறியீடுகளும், 7 எழுத்துப்பொறிப்புகளும் காணப்படுகின்றன. மீன், சூரியன், ஆமை, தராசு, அம்பு, திரிசூலம், உடுக்கை, அம்புமுனை, வில், மரம் போன்ற குறியீடுகள் பானை ஓடுகளில் காணப்படுகின்றன. 
          பனை ஓடுகளில் உள்ள குறியீடுகள் குலக்குறியீடுகளாக இருக்கலாம். எழுத்துக்கள் பயன்படுத்துவதற்க்கு முன்பு குறியீடுகள் எழுத்துக்களாகப் பயன்பட்டிருக்கலாம். பின்பு எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பானை ஒட்டில் குறியீடுகள் கீறப்பட்ட வடிவத்திலேயே கிடைக்கின்றன. 
          பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் இப்பகுதியில் கிடைக்கப்பட்டதன் மூலம் இப்பகுதியில் எழுத்தறிவு பெற்ற சான்றோர்கள் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. கொற்றன், நெடுங்கிள்ளி, சாத்தன் போன்ற குறுநில சோழ மன்னர்களின் பெயரையும், வணிகரையும் குறிக்கும் சொற்க்களுடன் பானை ஓடுகள் கிடைப்பதால் இப்பகுதி மக்களின் சிறப்பை அறியலாம்.
     மான் கொம்புகளும், விங்குளின் எலுப்புகளும் இங்கு கிடைப்பதைக்கொண்டு பார்க்கும்போது இப்பகுதி மக்கள் வேட்டைத்தொழில் மற்றும் மீன்பிடித்தொழில் செய்து வந்தார்கள் என ஊகிக்க முடிகிறது. பானைக்குறியீடுகளில் வில், அம்பு, ஆமை, மீன் ஆகியவற்றைக் கொண்டும் அவர்களின் தொழிலை அறியலாம். 
     இங்கு கிடைக்கும் ரௌலட்ட், ஆம்போரா பானை ஓடுகள் மூலம் இவர்கள் ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பில் இருந்திருக்கலாம். சூதுபவள மணிகள், வழுவழுப்பான வடஇந்திய கருப்புப்பானை  ஓடுகளும் இவ்வூர் மக்கள் குஜராத் மற்றும் வட இந்திய நகரங்களோடு நிலவழியாகவோ, நீர்வழியாகவோ தொடர்பில் இருந்திருக்கலாம். 
     பானை ஓடுகளில் சூரியன், கடிமரம், திரிசூலம், ஸ்வஸ்திகம் ஆகிய குறியீடுகள் இருப்பதைக்கொண்டு, இப்பகுதி மக்கள் இயற்கை வழிபாட்டைப் பின்பற்றி பின்பு சமயங்களைப் போற்றினார் என் அறிய முடிகிறது. 
     மேற்கண்ட அகழாய்வுப் பொருள்கள் மூலம் தேரிருவேலி கி.மு.300 முதல் கி.பி. 300 வரை உள்ள காலகட்டத்தில் சிறப்புடன் இருந்தது என அறிய முடிகிறது. 

No comments:

Post a Comment