Pages

Tuesday 17 September 2019

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் - வே.இராஜகுரு


       

       மேற்குத் தொடர்ச்சி மலை இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும். இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.

இம்மலைத்தொடர் தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும். 

இம்மலைத் தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இம்மலைத்தொடர் முற்காலத்தில் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் பகுதிகளோடு இணைந்திருந்தது. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால், கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென் இந்தியப் பகுதிகள் ஆசிய கண்டத்தை நோக்கி இடம் பெயர்ந்துள்ளன.

சுமார் 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவாக்கிய புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகும். இன்றும் மராட்டிய மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எரிமலை இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகின்றன. இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு பிற்காலத்தில் அரிய தாவரங்களும் விலங்குகளும் உருவாக காரணமானது. 

தென்னிந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகின்றன. இங்கு உருவாகி வங்காள விரிகுடாவில் கலக்கும் முக்கியமான ஆறுகள் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, வைகை ஆகியவை. இவை தவிர பல சிறு ஆறுகள் இங்கு உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டு பாசனத்திற்கும், சாகுபடிக்கும் மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்கும் உதவுகின்றன. இம் மலைத் தொடரை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

மாமல்லபுரம் - வே.இராஜகுரு


     

      சென்னைக்கு அருகில் உள்ளது மாமல்லபுரம். இங்குள்ள பாரம்பரியச் சின்னங்களை குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கற்றளிகள், கட்டுமானக் கோயில்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவை அனைத்தும் பல்லவர்களால் கி.பி.7ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை ஆகும். 

இச்சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பாகவும் உள்ளன. கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்றவை சிறப்பு வாய்ந்தவை. எனவே மாமல்லபுரம் நினைவுச் சின்னங்களை உலகப் பாரம்பரியச் சின்னமாக 1984 இல் யுனெஸ்கோ அறிவித்தது. 


மலைகளைக் குடைந்து அமைக்கப்படும் கோயில்கள் குடைவரைக் கோயில்கள் எனப்படுகின்றன. பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்து இவை உருவாக்கப்படுகின்றன. 

மாமல்லபுரத்தில் வராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம், இராமானுஜ மண்டபம் உள்ளிட்டவை குடைவரைக் கோயில்கள் ஆகும். கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் உள்ள குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. மகிஷாசுரமர்த்தினி, மகிசனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது.

இயற்கையான பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கி தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில், தேர் போலக் காட்சியளிப்பதால் இரதம் என அழைக்கப்படுகிறது. இவைதான் பிற்காலக் கோயில்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கின்றன. இவற்றின் மேல்பகுதி விமானம் என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள ஐந்து இரதங்கள் பஞ்சபாண்டவர்கள் பெயரை பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையன அல்ல. தர்மராஜன் மற்றும் அருச்சுனன் இரதங்கள் மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்துடனும், பீம இரதம் சாலை வடிவிலான சிகரத்துடனும், திரௌபதி இரதம் சதுரமான குடிசை போன்ற சிகரத்துடனும்,  சகாதேவ இரதம் கஜபிருஷ்ட சிகரத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளன.


மாமல்லபுரத்தில் மொத்தம் மூன்று கட்டுமானக் கோயில்கள் உள்ளன.  இதில் கடற்கரைக் கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதன் இரு பக்கங்களிலும் இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. 

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் சுமார் 30மீட்டர் உயரமும், 60மீட்டர் அகலமும் கொண்ட பாறையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பத் தொகுதியை அருச்சுனன் தபசு என்கிறார்கள். மாமல்லபுரத்தின் அதிசயம் என்றே இவற்றைக் குறிப்பிடவேண்டும். ஒரு பாறையில் 150-க்கும் மேற்பட்ட சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர். குரங்குகள் அமர்ந்திருக்கும் விதம், மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொரிந்துகொள்ளும் விதம், யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மலை ரயில் - வே.இராஜகுரு




நீலகிரி மலை ரயில் பாதை 1,000 மில்லிமீட்டர் அளவு கொண்ட குறுகியப் பாதை வகை இரயில் போக்குவரத்து ஆகும். தெற்கு இரயில்வே இப்பாதையில் இரயில்களை இயக்குகிறது. இந்தியாவிலுள்ள பற்சக்கர ரயில் பாதை நீலகிரி மலை ரயில் பாதை மட்டுமே ஆகும். 

நீராவி இயந்திரம் மூலம் இந்த மலை இரயில் இயங்குகிறது. குன்னூரிலிருந்து உதகமண்டலம் வரையுள்ள பாதையில் மட்டும் இந்த இரயில் டீசல் இயந்திரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சூலை 2005இல் நீலகிரி மலை இரயில் பாதையை உலக பாரம்பரியச் சின்னமாக  யுனெஸ்கோ அறிவித்தது.

ஆங்கிலேயர்கள் 1854ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி வரை ஒரு மலைப்பாதையை அமைக்கத் திட்டமிட்டனர். ஆனால் 1899இல் தான் இப்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. 

மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரையிலான மலைப்பாதையைக் கடக்க நீலகிரி மலை இரயில் பற்சட்டம் மற்றும் பற்சக்கரங்களால் இயங்கும் நீராவி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. 

நீலகிரி மலை இரயில்வே எக்சு வகை நீராவி பற்சட்ட இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது. சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் இவ்வியந்திரத்தை தயாரித்துள்ளது. குன்னூரிலிருந்து உதகமண்டலம் செல்லும் பயணிகளுக்கு இந்த இழுபொறியால் நீலகிரி மலை இரயில் பயணத்திற்கு ஒரு தனித்துவமான அழகு கிடைக்கிறது. இப்பாதை 46 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இதில் 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் உள்ளன. இதில் பயணிப்பது இனிய அனுபவம் ஆகும். 

இது ஆசியாவில் மிகக் கடுமையான சரிவு பாதையாகக் கருதப்படுகிறது. இப்பாதையில் மேட்டுப்பாளையம், குன்னூர், வெல்லிங்டன், அரவங்காடு, கேத்தி, லவ்டேல், உதகமண்டலம் ஆகிய இரயில் நிலையங்கள் உள்ளன.