தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தின்
அருகில் உள்ளது தாராசுரம். இங்கு கட்டிடக்கலை,
சிற்பக்கலைக்குப் பெயர்பெற்ற ஐராவதேஸ்வரர் கோயில் உள்ளது. இதை 2004இல் யுனெஸ்கோ உலகப்
பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது.
தஞ்சை பெரிய கோயிலைக்
கட்டிய இராஜராஜசோழனின் கொள்ளுப் பேரனான இரண்டாம் இராஜராஜனால் கி.பி.12 ஆம் நூற்றாண்டில்
இக்கோயில் கட்டப்பட்டது.
இக்கோயில் விமானம் ஐந்து
தளங்களுடன் 80 அடி உயரம் கொண்டது. தஞ்சை பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம்
கோயில்களை விடச் சிறியதாக இருப்பினும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளால் சிறந்து விளங்குகிறது.
யானை, காளை ஆகிய இரண்டும் இணைந்த சிற்பம்,
நடன மாது ஒருவர் இரண்டு தாள வாத்தியக்காரர்களோடு இணைந்து 4 கால்களோடு ஆடும்
சிற்பம் ஆகியவை புகழ்பெற்றவை.
இராஜகம்பீரன் மண்டபத்திற்கு
ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை
இழுத்துச் செல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் தூண்களில் நுணுக்கமான பல
சிற்பங்கள் உள்ளன. உள்ளங்கை அகல நர்த்தன கணபதி, நாட்டிய முத்திரைகள் காட்டும் பெண்கள்,
வாத்தியக்காரர்களின் குழுக்கள், புராணக் கதைகள் ஆகிய சிறிய அளவிலான சிற்பங்கள் மிகவும்
தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.
நுழைவுவாயில் நந்தியருகே
உள்ள பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்புகின்றன. இப்படிகள், தட்டும்போது சரிகமபதநீ
என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.
கோயிலின் மகாமண்டபத்தின்
தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளின் அரசனான நாகராஜன், அன்னபூரணி என பிற கோயில்களில்
காணப்படாத சிற்பங்கள் இங்கு உள்ளன.
கோயிலின் வெளிச்சுவர்களில்
மூன்று முகங்கள், எட்டுக்கைகளுடன் உள்ள அர்த்தநாரீஸ்வரர், குழலூதும் சிவன் ஆகியவை இங்கு
மட்டுமே காணப்படும் அரிய சிற்பங்கள்.
பிரகாரங்களின் மற்றொரு
அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்களாகும். இம்மண்டபங்களில்
சதுரம், செவ்வகம், நீள்சதுரம், வட்டம், பூக்கள் வடிவிலான ஒரே கல்லால் அமைக்கப்பட்ட
சாளரங்கள் உள்ளன.
No comments:
Post a Comment