Pages

Saturday 12 October 2013

ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம் (டி. எல். சஞ்சீவிகுமார்)

  
     சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு அரவிந்த் வால்என்று பெயரிட்டேன்என்றார்.


      இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.
     ‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். தவிர, மீனவர் நலனுக்கும் இன்றைக்கு தமிழக மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கும் இந்த ஆய்வுகள் மிக முக்கியம். ஏனெனில் கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களின் இடிபாடுகளால்தான் பவழப் பாறைகள் பெருமளவு உருவாகின்றன. இடிபாடுகளும் அதிலுள்ள பவழப் பாறைகளுமே மீன், குறிப்பாக சுறாக்கள் மற்றும் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடங்கள். அங்கு மீன் வளம் அபரிதமாக இருக்கும். அதனால், கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களைக் கண்டுபிடித்து அங்கு கழிவுகளைக் கொட்டாமல், செயற்கையாக வெப்பத்தை ஏற்படுத்தாமல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு பாதுகாத்தால் மீன் வளம், மீனவர் நலம் காக்கப்படும்.
     மீனவர்கள் எல்லை தாண்டி சென்று ஆபத்துகளை சந்திக்க வேண்டியது இல்லை. எல்லாவற்றையும்விட இதுபோன்ற பகுதிகள்தான் சுனாமி போன்ற பேரழிவுகளின்போது பொங்கி வரும் பேரலைகளை ஆற்றுப்படுத்தி ஊரை காக்கும் அரண்களாக அமைகின்றன.
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.
ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள்மரிக்கனாஎன்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.
புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்என்றார்.
எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் மதிலொடு பெயரியப் பட்டினம்என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.
 
மதில் என்னும் சொல்லுக்குஎயில்என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை சோபட்மாஎன்று குறிப்பிட்டுள்ளனர். சோஎன்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.
நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Saturday 28 September 2013

மதுரை ஆனைமலையின் பாரம்பரியம் (வே.இராஜகுரு)



மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் யானை படுத்திருப்பது போன்ற அமைப்பில் உள்ள மலையே ஆனைமலை எனப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக இம்மலை ஆனைமலை எனவே அழைக்கப்படுகிறது.
ஆனைமலை மூன்று தொல்லியல் சின்னங்களைக் கொண்டது.
1.      மலைமேல் உள்ள தமிழி கல்வெட்டு, கற்படுக்கைகள்.
2.      நரசிங்கப்பெருமாள் குடைவரைக்கோயில்
3.      10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் குகை மற்றும் புடைப்புச் சிற்பங்கள்


1.    மலைமேல் உள்ள தமிழி கல்வெட்டு, கற்படுக்கைகள்.
ஆனைமலையின் மேல் பகுதியில் இயற்கையாகஅமைந்த குகைத்தளத்தில் கற்படுக்கைகளும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவை கிறிஸ்துவின் சமகாலத்ததாகக் கருதப்படுகிறது. அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.  கல்வெட்டு கீழ்கண்டவாறு உள்ளது,
 
“இவ குன்றத்து உறையுள் பா தந்தான் எரி
அரிதன் அத்து வாயி அரட்ட காயிபன்

  இதை ‘இவ குன்றத்தூர் நாதன் தான எரி அரிதன் அத்துவாயிஅரட்ட காயிபன் என ஐராவதம் மகாதேவன் படித்து இவ குன்றம் என்றால் இக்குன்றம் எனப் பொருள் கொள்கிறார். 
 இவ என்பது யானையைக் குறிக்கும். இபம் எனும் வடமொழிச் சொல் இவ எனக் குறிக்கப்படுகிறது. திருப்புகழில் இவமாகி என வருகிறது. எனவே இவ குன்றம் என்பது யானைக் குன்றம் என்பதே சரியான பொருள் என முனைவர் இரா.நாகசாமி கருதுகிறார். 
 சமணர்கள் இம்மலையில் வாழ்ந்ததை திருஞானசம்பந்தர், “ஆனைமாமலை ஆதியாய இடங்களில் எனப் பாடியுள்ளார். பா என்பது படுக்கையைக் குறிக்கும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார். 
2.    நரசிங்கப்பெருமாள் குடைவரைக்கோயில்




நரசிங்கப்பெருமாளுக்கு அமைக்கப்பட்டுள்ள குடைவரைக்கோயில் மலையின் மேற்குச் சரிவில் அமைந்துள்ளது. இப்பகுதி நரசிங்கம் எனும் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இகோயில் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாக  முனைவர் இரா.நாகசாமி தெரிவிக்கிறார். இகோயில் மாறன்காரி எனும் தலைவனால் கி.பி.770 இல் கட்டப்பட்டதாகவும், அவன் தம்பி மாறன் எயினன் என்பவன் தானைத் தலைவனாய் உயர்ந்தபோது இகோயில் திருமுக மண்டபத்தைக் கட்டியதாக ஒளவை சு.துரைசாமி பிள்ளையவர்கள் கூறுகிறார். இக்கோயில் குடைவரையின் சரிவில் ப;பல கல்வெட்டுகள் காணப்ப்டுகின்றன. இவை வட்டெழுத்தால் எழுதப்பட்டவை. இக்குடைவரையின் முன்பு கட்டுமானக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் தற்போதும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. 

3. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் குகை மற்றும் புடைப்புச் சிற்பங்கள் 


இம்மலையின் மேற்குச் சரிவில் நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு அருகில்  மலையின் நடுப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் சமணர் படுக்கையும் வட்டெழுத்து, கிரந்தம், தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்குள்ள புடைப்புச் சிற்பங்களில் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா, இயக்கி ஆகியோர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சிற்பங்களும் சமணர்பள்ளியும் அச்சணந்தி என்ற சமணத் துறவியின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் மீது சுதை பூசி வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.  
 தீர்த்தங்கரரின் அருகில் கைவேலைப்பாடமைந்த ஒரு குத்து விளக்கும், இருமருங்கும் தாமரைகளும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை பாண்டியர் காலத்தில் சமணர் இருக்கைகள் அனைத்தும் ஓவிய வல்லுநர்கள் பணிபுரிந்திருப்பார்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.

இங்குள்ள ஓவியங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. சைவ வைணவ சமயங்களின் எழுச்சிக்குப் பின் அச்சணந்தி என்ற சமணத்துறவி தமிழகம் முழுவதும் கால்நடையாகவே நடந்து சமணப்பள்ளிகளை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உதவியவை
1. கல்வெட்டியல், இரா.நாகசாமி,1972, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியீடு
2.      வரலாற்றுக்காட்சிகள், ஒளவை சு.துரைசாமி பிள்ளை, 2009, நாம் தமிழர் பதிப்பகம்.
3. ஓவியப்பாவை, இரா.நாகசாமி,1979, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியீடு
4.      தொல்லியல்துறை தகவல்பலகை