Pages

Wednesday 29 July 2020

ஏர்வாடி தர்கா அருகே கோல் அளவு சொல்லும் 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகில் ஏரான்துறை என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கி.பி.16ஆம் நாற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மற்றும் அரபி எழுத்துகள் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறை கஞ்சிப்பள்ளி பகுதியில் உள்ள தோப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக முத்தரையர் நகர் செல்லம் கொடுத்த தகவலின் பேரில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளருமான வே.இராஜகுரு அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

        ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறையிலுள்ள தோப்பில்அடி உயரம்அடி அகலம் உள்ள ஒரு கடற்கரைப் பாறையால் ஆன ஒரு தூண் உள்ளது. இதன் இரு பக்கமும் கல்வெட்டுகள் உள்ளன. ஒரு பக்கத்தில் தமிழ் கல்வெட்டும் மறுபக்கத்தில் பெரிய அளவிலான சில அரபி எழுத்துகளும் குடுவை போன்ற ஒரு குறியீடும் உள்ளன. அரபி எழுத்துகள் உள்ள தூணின் பின்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையிலுள்ளது.

20 வரிகள் கொண்ட தமிழ்க் கல்வெட்டில், பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளதால், இக்கல்வெட்டு பற்றிய முழுமையான தகவல்களை அறியமுடியவில்லை. எனினும் இதில் உள்ள நாயகத்து போன்ற சில சொற்கள் மூலம், இக்கல்வெட்டு ஏர்வாடியிலுள்ள செய்யது இபுராகிம் பாதுஷா நாயகம் தர்காவுக்கு நிலதானம் வழங்கப்பட்டதாக இருக்கும் என ஊகிக்கலாம். தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் அளவுகள் இதில் சொல்லப்பட்டுள்ளது.

கீழ் மேல் கோல் முப்பத்தாறரை, தென் கீழை கல்லுக்கு மேற்குக்கு மேல் கோல் பதின்மூன்று, தென் வடல் கோல் அஞ்சு ஆகிய அளவுகள் கல்வெட்டில் உள்ளன. மற்ற அளவுகள் அழிந்துள்ளன. இதில் முப்பத்தாறரை, பதிமூன்று, அஞ்சு ஆகிய கோல் அளவுகள் சொல்லப்பட்டுள்ளன. துல்லியமான அரைக்கோல் அளவும் இதில் கூறப்பட்டுள்ளது. எண்களை எழுத்தால் எழுதியுள்ளனர். எண் குறியீடுகள் பயன்படுத்தப்படவில்லை. பொதுவாக 1 கோல் என்பது 16 சாண் அளவுகள் ஆகும். பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் சுந்தரபாண்டியன் கோல், வீரபாண்டியன் கோல் போன்ற கோல் அளவுகள் வழக்கில் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டில் நிலஅளவுகள் சொல்லும்போது இரு நபர்களின் பெயரில் உள்ள இரு கொத்துத் தெங்குகள் குறிப்பிடப்படுகின்றன. தெங்கு என்பது தென்னை மரத்தையும் கொத்துத் தெங்கு என்பது தென்னந்தோப்பையும் குறிக்கிறது. தற்போதும் கேரளா மற்றும் இலங்கையில் தென்னையை தெங்கு என்றுதான் . மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியான இங்கு பல நூற்றாண்டுகளாக தென்னந்தோப்புகள் இருந்து வருவதை இதன்மூலம் அறிய முடிகிறது.

கல்வெட்டில் நில அளவுகளின் எல்லை குறிப்பிடும்போது கீழைக் கல் என ஒரு சொல் வருகிறது. இது கடற்கரை வழியாக கீழக்கரை செல்லும் பாதையின் வழி காட்டும் கல்லாக இருக்கலாம். இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதை கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

    கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்திலிருந்துமீட்டர் தொலைவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான டீ கப் வடிவிலான ஒரு பொந்தன்புளி மரம் உள்ளது. இதை பப்பாரப்புளி என்கிறார்கள். இம்மரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா ஆகிய இடங்களை பூர்வீகமாகக் கொண்ட இம்மரங்கள், அரேபிய வணிகர்களால் ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளது. இம்மரத்தை இப்பகுதி மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


 நாளிதழ் செய்திகள்







ஏர்வாடி தர்கா கல்வெட்டு - நியூஸ் ஜெ செய்தி



Wednesday 15 July 2020

திருவுடையத்தேவர் கட்டியது கட்டபொம்மன் கோட்டையா? - வே.இராஜகுரு

வட்டவடிவிலான கோட்டை


இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குண்டாற்றின் வடக்குக் கரையில் பாறைகள் நிறைந்த மேடான அடர்ந்த காட்டுப்பகுதியில் மூன்று சுற்று மதில்களுடன் கட்டப்பட்ட ஒரு கோட்டை உள்ளது. இக்கோட்டையின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் குண்டாற்றின் கரையில் பலவிதமான பாறைகள் உள்ளன. இப்பாறைகள் உடைக்கப்பட்டு கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வீரர்கள் நின்று கண்காணிக்கும் வகையில் ஏழு கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோட்டை செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் உள் மற்றும் வெளிப்புறச்சுவர்களில் பலவிதமான பாறைக்கற்களைக் கொண்டு ஒட்டியுள்ளனர். இதனால் இக்கோட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது கற்கோட்டை போன்ற அமைப்பில் காணப்படுகிறது. கோட்டை கட்டுவதற்கான செங்கற்களை அப்பகுதியிலேயே தயாரித்து சுட்டு பயன்படுத்தியுள்ளனர். மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள பாறைகளை வெட்டி எடுத்தபின் அதில் ஏற்பட்ட பள்ளம் இக்கோட்டைக்கு அகழி போன்று அமைந்துள்ளது.

சுற்றுலாத் துறை வெளியிட்ட கையேட்டில் கட்டபொம்மன் கோட்டை

கி.பி.1877 ஆம் ஆண்டு குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன. வெள்ளத்தின் காரணமாகவோ, பெயர்த்தெடுத்ததன் காரணமாகவோ இக்கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த கற்கள் தற்போது பெருமளவில் இல்லை. கற்கள் பெயர்ந்து போன நிலையில் கற்கோட்டையாக இல்லாமல் வெறும் செங்கல் கோட்டையாகவே இப்போது காட்சியளிக்கிறது.

இக்கோட்டை வட்டவடிவமானது. இது போல வட்டவடிவக் கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரியிலும் உள்ளது. தற்போது உள்ள வட்டவடிவக் கோட்டைகளில் காலத்தால் பழமையானது கமுதியில் உள்ள கோட்டை. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை இக்கோட்டையை நினைவுச் சின்னமாக பாதுகாத்து வருகிறது. இக்கோட்டையைக் கட்டியது யார் எனப் பார்ப்போம்.

ஒருநாள் இக்கோட்டையில் கட்டபொம்மன் தங்கி இருந்தாராம்

இராமநாதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சேதுநாட்டை ஆண்ட சேதுபதி மன்னர்கள் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பல கோட்டைகளைக் கட்டியுள்ளனர்.  கிழவன் சேதுபதி, சேதுபதிகளில் மிகச் சிறந்த மன்னராகக் கருதப்படுகிறார்.

அவருக்கு இணையான சிறப்புக்கு உரியவர் கி.பி.1713 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட திருவுடையத்தேவர் என்ற முத்து விஜய ரெகுநாத சேதுபதி. இவர் கமுதி, பாம்பன், ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை ஆகிய இடங்களில் மூன்று புதிய கோட்டைகளைக் கட்டினார். இக்கோட்டைகள் பிரான்ஸ் நாட்டுப் பொறியியல் வல்லுநர்களின் உதவியுடன் புதிய வடிவங்களில் கட்டப்பட்டுள்ளன. கமுதிக்கோட்டை வட்ட வடிவமும், செங்கமடை கோட்டை அறுங்கோண வடிவமும் கொண்டவை. பாம்பன் கோட்டை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது போக எஞ்சி இருந்ததும், 1964 இல் வீசிய புயலில் அழிந்துவிட்டது. எனவே அதன் வடிவமைப்பைத் தெரிந்துகொள்ள இயலவில்லை.

தொல்லியல் துறை இணையத்தில் கட்டபொம்மன் கோட்டை

கமுதிக்கோட்டையைக் கட்டிய சேதுபதி மன்னர் திருவுடையத்தேவர், 12 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும் கிழவன் சேதுபதிக்கு இணையான நிர்வாகச் சிறப்புக்குரியவர். அவரின் மேலும் சில சிறப்புகள் கீழே:

குண்டாறு, பரளையாறு ஆகிய இரு ஆறுகளும் இணையும் இடத்திலிருந்து இரகுநாதகாவிரி என்ற கால்வாய் வெட்டி  உத்தரகோசமங்கை அருகே உள்ள களரிக் கண்மாயுடன் இணைத்து வறண்டுபோன பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பாசன வசதியை ஏற்படுத்தி  வேளாண்மையைப் பெருக்கியவர்.

          தன் இரு மகள்களின் கணவனான, இராமேஸ்வரம் பகுதி அரசப் பிரதிநிதியாய் இருந்த தண்டத்தேவருக்கு, சிவத்துரோகம் செய்தார் எனக் கருதி மரணதண்டனை விதித்தவர். அதன் பிறகு அவரின் இரு மகள்களும் உடன்கட்டை ஏறினர். இருமகள்களின் நினைவாக அக்காள்மடம், தங்கச்சிமடம் என இரு மடங்களை உருவாக்கினார். இன்று அப்பெயரில் அங்கு இரு ஊர்கள் உருவாகியுள்ளன.

தொல்லியல் துறை இணையத்தின் தகவல் பகுதியில் கமுதிக் கோட்டை

இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனையின் உள் பகுதி முழுவதும் ஓவியங்கள் தீட்டி அழகுபடுத்தியவர். அதில் உள்ள ஓவியங்களில் இருப்பவரும் அவரே. இராமநாதபுரம் நகரில் உள்ள முத்துராமலிங்கசுவாமி ஆலயம் இவர் காலத்தில் கட்டப்பட்டதே.

இவர் பல தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்தார். மதுரை சொக்கநாதப் புலவரின் பணவிடு தூது, தேவை உலா ஆகிய நூல்கள் இவருடைய ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டவை.

இவ்வளவு சிறப்புக்குரிய திருவுடையத்தேவர் தான் கமுதிக்கோட்டையை கட்டினார். ஆனால் நினைவுச் சின்னமாகப் பராமரித்து வரும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இதை, அத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் என்ற பகுதியில் கட்டபொம்மன் கோட்டை எனவும், நினைவு சின்னம் பற்றிய தகவல் பகுதியில் கமுதிக்கோட்டை எனவும் பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை 2010இல் வெளியிட்ட தகவல் அட்டையில் இதை கட்டபொம்மன் கோட்டை என்றே பதிவிட்டுள்ளது. ஏற்கனவே சேதுபதிகளின் பல வரலாற்றுத் தடயங்கள் அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளதும் தவறான பெயருடன் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

எனவே கோட்டையைக் கட்டிய மன்னர் பெயரில் கமுதிக்கோட்டைக்கு திருவுடையத்தேவர் கோட்டை என பெயரிட்டு பாதுகாக்க தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையை கேட்டுக் கொள்கிறேன்.

கட்டுரையாளர்:

தலைவர்,

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்,

இராமநாதபுரம்.

Saturday 11 July 2020

கொத்துக்கொத்தாய் மடிந்த மக்கள் 200 ஆண்டுகளுக்கு முன் பரவிய தொற்றுநோய் காலரா - வே.இராஜகுரு

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பரவிய காலரா பல ஆண்டுகளாக பல லட்சம் பேரை கொன்று குவித்துச் சென்றது.

உலகத்தை அச்சுறுத்தும் கொடிய கொள்ளைநோய்கள் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு விதமாக மக்களைக் கொன்று குவித்து வந்துள்ளன. அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்திலேயே அதைக் கட்டுப்படுத்தமுடியாமல் நாம் திணரும்போது, தடுப்புவழிகள் இல்லாத அக்காலங்களில் மக்கள் உயிரிழப்பும் தவிர்க்க முடியாததாக இருந்துள்ளது.

வைரஸ், பாக்டீரியாபூஞ்சைபுரோட்டோசோவா போன்றவை காரணமாக ஒரு நோய் உருவாகியுள்ளது என மருத்துவ சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டால்  அது தொற்றுநோய் எனப்படுகிறது. இத்தகைய தொற்றுநோய்கள் தொடுவதனாலோ, காற்று, நீர், உணவு வழியாகவோ ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றுகிறது.

ஒரு தொற்றுநோய் வேகமாகப் பரவி, ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களைத் தாக்குமாயின் அது கொள்ளைநோய் எனவும், அதுவே அதிக வேகத்தில் பரவி, உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களைத் தாக்கினால் அதை  உலகம்பரவுநோய் எனவும் அழைக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக பிளேக், அம்மை, இன்ஃபுளுவென்சா காய்ச்சல் போன்ற பல நோய்கள் பரவி உலகத்தையே அச்சுறுத்தி வந்துள்ளன.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வேகமாகப் பரவிய காலரா என்ற கொள்ளைநோய் மூலம் மக்கள் கொத்துக்கொத்தாய் மடிந்தனர் என்பதை அறியும்போது நாம் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது என்பதை உணர்ந்துகொள்ளமுடியும்.

இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா போன்று காலராவுக்கும் அன்று பலர் மடிந்தார்கள். கி.பி.1887இல் வெளிவந்த காலரா பற்றிய அறிக்கையில் 1871-1881 வரையிலான காலத்தில் அன்றைய தென்மாவட்டங்களில் மட்டும் 63,437 பேர் காலராவால் இறந்ததாகத் தெரிவித்துள்ளார்கள். 1877இல் மட்டும் 30,000 பேர் இறந்துள்ளார்கள். அந்தாண்டு காலராவின் தாக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக அதிகமாக இருந்துள்ளது.

கி.பி.1831-32, 1843-44, 1861-63 ஆகிய ஆண்டுகளில் காலரா, பஞ்சம் ஆகியவற்றின் பாதிப்புகள் ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மிக மோசமாக இருந்ததாக கி.பி.1868இல் வெளிவந்த மதுரை மாவட்ட மேனுவல்லில் நெல்சன் தெரிவிக்கிறார். கி.பி.1563லேயே கோவா பகுதியில் இத்தகைய காலரா நோய் தாக்குதல் இருந்துள்ளது. காலராவை போர்ச்சுகீசியர் மார்டிஸின் என அழைத்துள்ளனர். கி.பி.1609லேயே மதுரை பகுதியில் காலரா இருந்ததாகவும் நெல்சன் தெரிவிக்கிறார்.


பல ஆங்கிலேயர்களும் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கி.பி.1832இல் காலரா பாதிப்பால் ஜார்ஜ் கேரோவ் பேட் என்ற 14 வயது சிறுமி இறந்துள்ளாள். இராமநாதபுரம் வடக்குத் தெரு கிறிஸ்து நாதர் தேவாலயத்தில் உள்ள கல்லறைக் கல்வெட்டால் இதை அறியமுடிகிறது.

மேலும் இங்கிலாந்திலிருந்து வந்த கிறித்துவ சபை பாஸ்டர் ஆர்தர் ஹீபர் தாமஸ் என்பவர், இராமநாதபுரம் பகுதிகளில் கி.பி.1888 டிசம்பரில் புயல் காரணமாக காலரா பரவி பலர் இறந்ததாக பதிவு செய்துள்ளார். இவர் பெயரில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இரு தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 கொள்ளைநோயோ தொற்றுநோயோ தனிமனிதனின் விழிப்புணர்வும் பாதுகாப்பும் தான் நம்மைப் பாதுகாக்கும். கடந்தகால நோய்களின் வரலாற்றில்  இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு நம்மைக் காத்துக் கொள்வோம்.

படம்: இராமநாதபுரம் வடக்குத் தெரு கிறிஸ்து நாதர் தேவாலய கல்லறைக் கல்வெட்டு

கட்டுரையாளர்: தலைவர்,

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.


தினகரன் நாளிதழ் செய்தி



கல்வெட்டுகளின் அமைப்பு – வே.இராஜகுரு

மேல அரும்பூர் சேதுபதி கால சூலக்கல் கல்வெட்டு

பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு, மங்கலச் சொல், மெய்க்கீர்த்தி, அரசன் பெயர், ஆண்டுக் குறிப்பு, கொடை கொடுத்தவர், கொடைச் செய்தி, சாட்சி, காப்புச் சொல், எழுதியவர் ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும்.

கல்வெட்டின் தொடக்கத்தில் மங்கலச் சொல் அமைந்திருக்கும். பெரும்பாலும் மங்கலச் சொல் ஸ்வஸ்திஸ்ரீ என இருக்கும். ஸ்ரீமது, சுபமஸ்து, நமசிவாய, சித்தம் என்ற சொற்கள் அமைந்துள்ள கல்வெட்டுகளும் உண்டு.

          கல்வெட்டு எந்த மன்னன் காலத்தைச் சேர்ந்ததோ அம்மன்னனின் பெருமைகள், போர் வெற்றிகள் முதலிய செய்திகள் மெய்க்கீர்த்தி பகுதியில் இடம்பெறும். இந்த மெய்க்கீர்த்திகள் மூலம் மன்னர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள முடிகிறது.

எந்த மன்னன் காலத்தில் கல்வெட்டு வெட்டப்பட்டதோ அம்மன்னன் பெயர் கல்வெட்டில் இடம் பெறும். கல்வெட்டில் மன்னர்களின் ஆட்சியாண்டு இடம் பெற்றிருக்கும். சில கல்வெட்டுகளில் கலியுகம், சாலிவாகன சகாத்தம், கொல்லம் போன்ற ஆண்டுகளும் இருக்கும்.

கொடை கொடுத்தவரின் நாடு, ஊர் முதலிய விவரங்களும், அவர் குடிப் பெயரும் பின்னர் அவருடைய பெயரும் வெட்டப்பட்டிருக்கும். பெண்கள் கொடை அளித்தால் அவர்கள் தந்தை பெயர் அல்லது கணவர் பெயருடன் அவர்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும்.

எந்தக் கோயில் இறைவனுக்கு அல்லது யாருக்கு, எதன் பொருட்டு, என்ன கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் கொடைச் செய்தியில் குறிக்கப்படும். கொடையாக வழங்கப்பட்ட இடம் உள்ள நாடு, ஊர் முதலிய விபரங்களும்,  அதன் நான்கு எல்லைகளும் இதில் குறிக்கப்பட்டிருக்கும். வழங்கப்பட்ட கொடைக்குச் சாட்சியாக ஒருவரோ அல்லது சிலரோ கையொப்பம் இடுவர்.

அளிக்கப்பட்ட கொடையை காப்பாற்றுபவர்களுக்குப் புண்ணியமும், அழித்தவர்களுக்குப் பாவமும் வரும் என்பன போன்ற தொடர்கள் காப்புச் சொல் பகுதியில் எழுதப் பெற்றிருக்கும். கல்வெட்டை எழுதியவர்கள் பெயர் இறுதிப் பகுதியில் இருக்கும்.