Pages

Sunday 16 November 2014

சிந்துசமவெளி நாகரிகம் திராவிடர் களுடையதே: ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன்




தினமலரில் 


சென்னை: சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை, ரிக் வேதத்தின் வழியாக, பிரபல கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் விளக்கினார்.

ஒன்றுக்கொன்று...

சென்னை, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி மையத்தில், சிந்துசமவெளி குறியீடுகளை விளக்கும், டிராவிடியன் ப்ரூப் ஆப் தி இண்டஸ் ஸ்க்ரிப்ட் வையா தி ரிக் வேதா என்ற புத்தகத்தின் வழியாக, ஐராவதம் மகாதேவன் அளித்த விளக்கம்: சிந்துசமவெளி முத்திரைகளை தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றை அடையாளம் கண்டால், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் அர்த்தங்கள் கொண்டதாக உள்ளன என்பதை அறிய முடிகிறது.

அவை, தொல் திராவிட வடிவங்களே என்பதும் உறுதியாகிறது. சிந்து சமவெளி முத்திரைகளை வாசிப்பதன் மூலம், சிந்துசமவெளி மரபுகள், இரண்டு நீரோடைகளாக பிரிந்துள்ளதாக சான்றுகள் அறிவிக்கின்றன. அவை, முந்தைய திராவிட மரபின் வேர்கள், பண்டைய தமிழகத்திற்குள்ளும், சிந்து சமவெளியிலும் இருப்பதை, சிந்துவெளி முத்திரைகள் உறுதிப்படுத்துகின்றன.
பாண்டியர்களின் மூதாதையர்கள், சிந்து சமவெளியில் வணிகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கலாம். அவர்கள், தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டை தமிழ் பேசியவர்களாக இருந்திருக்கலாம்.

தொடர்பு அதிகம்

முந்தைய இந்திய - ஆரிய பண்பாட்டுக்குள் உள்ள (ரிக் வேதம்) வார்த்தைகள், சிந்துவெளியில் இருந்து, கடன் மொழியாக நுழைந்திருக்கின்றன. ரிக் வேதத்தில் வரும் பூசன் என்ற கடவுளின் பெயர், சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. சிந்துசமவெளி நாகரிகம், முன் வேத பண்பாட்டை விட, காலத்தால் மிக முந்தையது என்பது, இதனால் விளங்குகிறது.

சிந்துசமவெளி குறியீடுகளுக்கும், பண்டை தமிழ் வார்த்தைகளுக்குமான தொடர்பு அதிகம் இருப்பதை, சங்க கால தமிழ் சொற்கள் மூலமாக அறியலாம். சிந்துவெளி குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள் சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான வார்த்தைகள், தொல்தமிழில் உள்ளன. எனவே, சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

 தினமணியில்



ரிக் வேதத்தில் பல்வேறு திராவிடச் சான்றுகள் உள்ளதாக "தினமணி' முன்னாள் ஆசிரியரும், கல்வெட்டியல் ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் கூறினார்.

சிந்துவெளி நாகரிகம், எழுத்துகள் தொடர்பாக 50 ஆண்டுகளாக ஐராவதம் மகாதேவன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் தன் ஆய்வுக் கட்டுரையை வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டு பேசியது:
""ரிக் வேதத்தில் காணப்படும் திராவிடச் சான்றுகள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் மூன்று விஷயங்கள் உறுதியாகத் தெரிய வருகின்றன.
சிந்துவெளி நாகரிகத்தின் மொழி, திராவிட மொழியின் முற்கால வடிவம் ஆகும்.
சிந்துவெளி நாகரிக மக்கள் தென்னகம் நோக்கி இடம்பெயர்ந்ததால் தென்னிந்தியாவில் அவர்களின் குடியேற்றம் நடந்துள்ளது. இதன் காரணமாக, சிந்து திராவிடத் தாக்கம் தென்னக திராவிட மொழிகளில் காணப்படுகிறது.
இதற்குச் சான்று பகரும் வகையில், சங்க இலக்கியப் பாடல்களில் பல்வேறு சொற்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமாக பாண்டிய குடிபெயர்களாகிய மாறன், செழியன், வழுதி, பாண்டியன் என்ற சொற்களின் மூல வடிவங்கள் சிந்துவெளி இலச்சினைகளில் ஒருங்கிணைந்த சொல் தொடராக இடம்பெற்றுள்ளன. (இதை படங்கள் மூலம் ஐராவதம் மகாதேவன் விளக்கிக் காட்டினார்.)
ஆரிய மக்களும், திராவிட மக்களும் கலந்து இந்திய சமுதாயம் தோன்றிய பின்னரே ரிக் வேதம் இயற்றப்பட்டது எனலாம். ரிக் வேதத்தில் திராவிடச் சான்றுகள் பல உள்ளன. சிந்துவெளி நாகரிகத்தின் பெயர்களும், பட்டங்களும் ரிக் வேதத்தில் மொழிபெயர்ப்புகளாகக் காணப்படுகின்றன.
அதாவது, சிந்துவெளி நகரங்களில் வாழ்ந்த வணிகக் குழுவினரின் தலைவன் பிற்காலத்தில் வேளாண்மை, மாடு மேய்த்தல் போன்ற தொழில்களின் அதி தேவதையாக பூஷண் என்ற பெயருடன் உருவாகியது ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக பல தொன்மைக் கதைகளும் உள்ளன'' என்றார் ஐராவதம் மகாதேவன்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சூழலியல் ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன், கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

Wednesday 12 November 2014

வரலாறு வாழும் தமிழகம் - தினமலர் - என் பார்வை

இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை' என்று மேனாட்டு அறிஞர்கள் ஒரு சிலர் சொல்லிச் சென்றுள்ளனர். அது உண்மை தான். ஏனெனில் எத்தனையோ வரலாற்று சின்னங்களை வடித்து வைத்த நம் கலை வல்லுனர்கள் அவற்றை உருவாக்கிய தொழில் நுட்பத்தை வருங்கால சந்ததியினர் அறியும் வகையில் எவ்விதத்திலும் பதிவு செய்ய தவறிவிட்டனர். அதனால் தான் விண்முட்டும் விமானம் கொண்ட தஞ்சை பெரிய கோயில் அமைப்பின் நுட்பம் நமக்கு விளங்கவில்லை. அக்கோயிலில் பொறித்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் எத்தனையோ வரலாற்று செய்திகளை, சமூக பிரச்னைகளுக்கான தீர்வுகளை நமக்கு சொல்லாமல் சொல்லுகின்றன. நமது மக்கள் மெய்க்கீர்த்தி என்ற பெயரிலே மன்னர்களின் வரலாற்றை ஒரு குளிகையில் (மாத்திரையில்) அடைத்தது போல் எழுதி வைத்திந்தார்கள். அதனை நாமும் அறிந்திருக்கவில்லை. அயலவருக்கும் அறிவிக்கதெரியவில்லை. எனவே தான் அவர்கள் நம்மை பார்த்து வரலாற்றுணர்வு அற்றவர்கள் என்று வக்கனை பேசுகின்றனர்.



தமிழ் வளர்த்த மதுரையை சுற்றிதான் எத்தனை வரலாற்று சின்னங்கள். ஆதித்தமிழன் பேசிய தமிழ் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர்கள் மதுரை மக்களே என்பதைத்தான் மாங்குளம், அரிட்டாபட்டி, ஆனைமலை, அழகர்கோயில், திருவாதவூர் மலைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.



கோயில்களே பள்ளிகள் : நமது நாட்டில் ஊரெங்கும் கோயில்கள், அவையெல்லாம் ஏதோ நம்மக்களை மூடர்களாக்கும் மூலதனங்கள் என்று சிலர் எண்ணிக் கொண்டுள்ளனர். இல்லை. அவையெல்லாம் நமது ஆண்ட பரம்பரையின் அறிவுத்தேடல்கள். கோயில்களே ஒரு காலத்தில் நமது பள்ளிகள். நீதிமன்றங்கள், வங்கிகள், வேலைவாய்ப்பு மையங்கள், ஓதுவார் சாலை என்னும் மருத்துவமனைகள், ஆதரவற்றோரை அரவணைத்த ஆஸ்ரமங்கள், அனைவருக்கும் வேண்டியவற்றை செய்த அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், கலைக் கருவூலங்கள், அருங்காட்சியகங்கள். ஒன்றிலே எல்லாமாக செய்யப்பட்ட கோயில்கள் என்னும் பாரம்பரிய சின்னங்கள் தான் நமது வலிமை. நமது வரலாறு, நமது வாழ்வு.



உன்னத கலைப்படைப்பு : 'தென்னக எல்லோரா' என்னும் வகையில் கழுகுமலையில் கலைக்கோயில் ஒன்று கண்டான் பாண்டிய பெருவேந்தன். வடக்கே அஜந்தா என்றால், தெற்கே ஒரு சித்தன்ன வாசல். பனைமலை என ஒன்றுக்கு இரண்டாக ஓவியக்கலைக்கு ஒப்பற்ற சான்றுகள். நுண்கலைகளின் நேரிய வளர்ச்சிக்கு சான்றாக ஆனைமலை, அரிட்டாபட்டி, கீழவளவு ஓவியங்கள். அதற்கும் மேலாக 4,000 வருட பழமைவாய்ந்த ஓவியங்களுக்கும் பஞ்சமில்லை. செந்தவரை, கீழ்வாலை, உடையாள் நத்தம், மல்லப்பாடி, சிறுமலை, கிடாரிப்பட்டி, திருமலை, கருங்காலக்குடி என எங்கெங்கு காணினும் நம் பழங்குடி மக்களின் கலைப்படைப்புகள் தான்.



வாழும் வரலாறுகள் : நீதிபதிகளுக்கு, வக்கீல்களுக்கு என்னென்ன தகுதிகள் என்பதை வரையறுத்திச் சொல்லும் மானூர் (நெல்லை) கல்வெட்டை சுப்ரீம் கோர்ட்டில் வைத்து போற்றுகின்றனர். ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் வரையறுத்த சட்டமும் நீதியும் இது. ஒரு கோயில் இருந்தால் அது ஊர். நான்கு கோயில்கள் இருந்தால் அது நகரம். பல கோயில்கள் இருந்தால் மாநகரம். காஞ்சியே 'தமிழ்நாட்டின் முதல் மாநகரம்' என கல்வெட்டுகள் சொல்கின்றன. நாடெல்லாம் பொள்ளலாகச் சிலைவடித்த காலத்தில் தமிழகத்தில் மட்டும் உள்ளீடு முழுவதும் செம்பொன்னால் சிலைவடித்தவர்கள் தமிழர்கள். ஆடவல்லான், அர்த்தநாரீசுவரர், ரிசபாந்தியர், கல்யாணசுந்தரர் என எத்தனை உன்னதமான கலை வடிவங்கள் நம் கோயில்களில் உள்ளன. கொடிய மனம்கொண்ட சிலர் இவற்றை கோடிகளுக்கு விலைபேசி அயலவருக்கு விற்பதும் பின் பெரும் பாடுபட்டு நாம் மீட்பதும் செய்திகள்.

மண்ணை வெட்டினால் வரலாறு. ஆற்றை தோண்டினால் காசுகள், கல்லை தட்டினால் இசை, என்று எங்கெங்கு காணினும் வரலாறாகவே வாழ்கிறது தமிழகம். இவற்றையெல்லாம் இனிவரும் தலைமுறை செய்ய முடியுமா? செய்யத்தயாராக இருக்கிறோம். எனவே தான் இருப்பதையேனும் காக்க வேண்டிய கட்டாயக் கடமையில் நாம் இருக்கிறோம்.



பாதுகாக்கும் கடமை : தொல்லியல் மரபுச் சின்னங்களை பாதுகாக்க பல சட்டங்கள் உள்ளன. 300 மீ., வரை ஆக்கிரமிப்புகள் கூடாது. சட்டங்கள் வலுவிழந்து வேடிக்கை பார்க்கும் நிலைதான் உள்ளது. ஒரு கூட்டம் பாரம்பரிய சின்னங்களை பங்குபோட துடிக்கின்றது.

இதற்கு என்ன தான் வழி. மக்களின் மனமாற்றம் விழிப்புணர்வு, நாமிருக்கும் நாடு நமதே என்ற எண்ணம், நமது வரலாற்று சின்னங்களை நமது தந்தையர் வாழ்ந்த வீடுகளாக, நமை ஈன்ற தாயார் வாழ்ந்த கோயில்களாக கருத வேண்டும். கற்பனையாக எழுதப்பட்டவையல்ல நமது வரலாறுகள். அவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆதாரங்கள் ஊர்களிலே உள்ளன என்பதை நாம் உணர வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு உணர்த்த வேண்டும்.



-சொ.சாந்தலிங்கம்

தொல்லியல் அறிஞர்,

மதுரை. 98946 87358