Pages

Wednesday 11 May 2016

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் காணப்படும் அரிய மூலிகைத் தாவரங்கள் - வே.இராஜகுரு



இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கெங்கும் சீமைக் கருவேல மரங்களே (Prosopis juliflora) நீக்கமற நிறைந்துள்ள நிலையில் மிக அரிதான மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடிய சில தாவரங்களும் இங்கு இயற்கையாகவே வளர்ந்து வருவது இம்மாவட்ட தொன்மைக்குச் சான்றாக உள்ளது. அத்தாவரங்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் காணப்படுவது மிகவும் ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு,  இராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாற்றுச்சிறப்பு மிக்க களத்தாவூர், கீழச்சீத்தை, நரிப்பையூர், செங்கமடை  ஆகிய இடங்களில்  களஆய்வு செய்த போது இம்மாவட்டத்தில் பெரும்பாலும் காணப்படாத  அரிதான சில மூலிகைத்தாவரங்கள் அங்கு இருப்பதைக் கண்டறிந்தார்.


இராமநாதபுரம் அருகே களத்தாவூர் – சங்கஞ்செடி:



சங்கஞ்செடி
 
இராமநாதபுரம் அருகே உள்ளது களத்தாவூர். மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருநெல்வேலி சுத்தமல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர் சோழபுரம், திருப்புல்லாணி ஆகிய கோயில்களில் உள்ள கல்வெட்டுக்களில் செவ்விருக்கை நாட்டு களத்தாவூர் அரூர் என்ற ஒண்ணில கீர்த்தி நல்லூர் என குறிக்கப்படும் இந்த ஊர் 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் புகழ் பெற்று விளங்கியுள்ளது.
இந்த ஊர் கண்மாய் கரையில் புதர் செடியாக (shrub) சங்கஞ்செடி காணப்படுகிறது. இப்பகுதியில் எங்கும் இல்லாமல் இந்த ஊரில் மட்டும் இச்செடி காணப்படுகிறது.
முட்சங்கான், இசங்கு, உவரிச்சங்கம் என பல பெயர்களில் அழைக்கப்படும் சங்கஞ்செடி ஒரு மூலிகைச் செடி ஆகும். இதன் பழம் சங்கு போன்ற வெள்ளை நிறத்தில் இருப்பதால் இப்பெயர் இதற்கு வந்திருக்கலாம். இதன் தாவரவியல் பெயர் Azima tetracantha Lam ஆகும். இதன் இலை, வேர், பழம் ஆகியவை மருத்துவக் குணமுடையவை.
      பெரிய அளவிலான பச்சை நிற முட்களைக் கொண்டுள்ள இச்செடியின் தண்டும் பச்சை நிறத்தில் தான் இருக்கிறது. இதன் இலைகள் உறுதியானதாக பளபளப்பாக இருக்கிறது. இதன் மலர்கள் வெண்ணிறமானவை. பூங்கொத்துகளாய் பூப்பவை. இதன் பழங்கள் வெண்ணிறத்தில் கோள வடிவமானவை. இவை பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையில் பூத்து மே முதல் ஜூன் வரை காய்க்கக் கூடியவை. கடலோர சமவெளிகள், பொட்டல்வெளிகள், வறண்ட காடுகள் மற்றும் 2500 அடி வரை உயரமான பகுதிகளில் புதர்களாக இவை காணப்படுகின்றன.
இதன் வேர்கள் ஹெபாடைடிஸ் ‘பி’ க்கு சிறந்த மருந்தாகும். இந்தச் செடியின் வேருக்கும், இலைக்கும் சிரங்கு, சொறி, புண், கொப்பளம், கரப்பான், பித்தநோய் ஆகிய நோய்களைத் தீர்க்கும் சக்தி உண்டு.



உத்தரகோசமங்கை அருகே கீழச்சீத்தை – கொக்கிமுள் ஆதண்டை :
களரி கண்மாய் கரையில்
கொக்கிமுள் ஆதண்டை


கொக்கிமுள் ஆதண்டை



உத்தரகோசமங்கை அருகே உள்ள கீழச்சீத்தை என்ற ஊரில் உள்ள கானத்திடலில் பண்ணைக்குட்டை தோண்டிய இடத்தில், 2300 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககாலத்தைச் சேர்ந்த ஒரு ஊர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு ரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவ்வூர் கி.மு.300 முதல் கி.பி.1200 வரையிலான காலத்தில் புகழ் பெற்று விளங்கி இருந்துள்ளது.
பண்ணைக்குட்டை அருகில் களரிக் கண்மாய் கரையில் கொக்கிமுள் ஆதண்டை என்ற புதர்ச்செடி உள்ளது. இச்செடி இங்கு மட்டும் அரிதாகக் காணப்படுகிறது. கொக்கி போன்ற முட்களுடன் காணப்படுவதால் இச்செடி இப்பெயர் பெற்றிருக்கிறது. முட்டை போன்ற வடிவத்தில் இதன் இலைகள் காணப்படுகின்றன. இதன் காய்கள் கோளவடிவில் பச்சை நிறத்தில் உள்ளன. இவை மே முதல் ஜூலை வரையில் பூத்து செப்டம்பர் முதல் டிசம்பர் வரை காய்க்கக் கூடியவை. இத்தாவரம் புதர் போல் வளர்ந்தும் கொடிபோல் படர்ந்தும் காணப்படுகிறது.
வறண்ட முல்லை நிலக் காடுகள், நெய்தல் நிலம் மற்றும் 3000 அடி வரை உயரமான பகுதிகளில் இவை வளரும் தன்மை உடையவை. கருஞ்சூரை, காட்டுக்கத்தரி, கரிந்து என பல பெயர்களால் இது அறியப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Capparis sepiaria ஆகும். இதன் இலைகள், பூக்கள், வேர்கள் முதலியவை மருத்துவக் குணமிக்கவை. இதன் வேர்கள் இருமல் மற்றும் பாம்புக்கடிக்கும், இலைகள் நீரிழிவு நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.


நரிப்பையூர் பிழைபொறுத்தம்மன் குடியிருப்புமணிப்பூவந்தி


மணிபூவந்தி மரம்


மணிபூவந்தி மரத்தின் பழம்

தூத்துக்குடி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நரிப்பையூர் ஊராட்சியைச் சேர்ந்த பிழைபொறுத்தம்மன் குடியிருப்பு என்ற பகுதியில் திறந்தவெளியில் அமைந்துள்ள பிழைபொறுத்தம்மன் என்ற காளி சிலை முன்பு உள்ளது மணிப்பூவந்தி மரம். கி.பி.12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்காளி சிலை பாண்டியர்காலக் கலை அமைப்புடன் காணப்படுகிறது. மலைப்பகுதிகளில் மட்டும் காணப்படும் மணிப்பூவந்தி மரம் இங்கு கடற்கரை மணற்பகுதியில் காணப்படுகிறது.
மணிப்பூவந்தி மரத்தின் தாவரவியல் பெயர்  Sapindus Emarginatus ஆகும். இம்மரம் பூவந்தி மரம், பூந்திக்கொட்டை மரம், சோப்புக்காய் மரம் என பல பெயர்களால் அறியப்படுகிறது. நீள்வட்டவடிவ இலைகளையும், பூங்கொத்துக்களாய் பூக்கும் வெண்ணிறமான மலர்களையும் கொண்டவை. இதன் காய்கள் முட்டை அல்லது கோள வடிவில்  இருக்கும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பூத்து கோடைகாலங்களில் காய்ப்பவை. தமிழகத்தின் வடமேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட வறண்ட காடுகள், நீலகிரி, ஆனைமலை, பழனிமலை, பொதிகைமலை காடுகள் போன்ற  2500 அடி வரையிலான உயரமான பகுதிகளில் இம்மரங்கள் காணப்படும். இம்மரத்தின் பழங்கள் மருத்துவ குணமுடையவை.

பேச்சு வழக்கில் பூந்திக் கொட்டை எனப்படும் இம்மர பழங்களின் உலர்ந்த சதைப்பகுதியை இடித்து, நீரில் சற்று ஊறவைத்துப் பிழிந்தால், மிகுந்த நுரை, நறுமணத்தோடு திடமான நீர்மம் உண்டாகும். இதை எண்ணெய் வைத்த தலையில் தேய்த்துக்குளித்தால் எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் அறவே நீங்கிவிடும்.
சீயக்காயுடன் பூவந்திக் கொட்டையையும் சேர்த்து அரைத்து தலைக்கு ஷாம்புவாக பயன்படுத்துவதும் உண்டு. இத்தாவரத்தின் கொட்டைகள் பல ஆயிரம் ஆண்டுகளாக இயற்கையான சோப்பாக, சுத்தம் செய்வதற்கான பொருளாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
 
ஆர்.எஸ்.மங்கலம் செங்கமடை கோட்டை – நாட்டு வீழி : 

இராமநாதபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் R.S.மங்கலத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது செங்கமடை என்ற ஊர். இங்குள்ள கோட்டைக்கரை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோட்டை, கி.பி.1713 முதல் கி.பி.1725 வரை இராமநாதபுரம் சேது நாட்டை ஆட்சி செய்த முத்து விஜய ரெகுநாத சேதுபதியால் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அறுங்கோண வடிவில் அமைந்துள்ள இக்கோட்டையின் உள்பகுதியில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



 




                               நாட்டு வீழி

இக்கோட்டையின் உள்ளே  நாட்டு வீழி என்ற புதர்ச்செடி அதிகளவில் உள்ளது. இதன் தாவரவியல் பெயர் Cadaba indica ஆகும். நாட்டு வீழி, விழுதி என அழைக்கப்படும் இது ஒரு மூலிகைச் செடி ஆகும். இது தனியிலைகளையும் இளம் பச்சை வண்ண பூக்களையும் செந்நிறப் பழங்களையும் உடைய முள்ளில்லாத சிறுசெடியாகும். ஜனவரி முதல் அக்டோபர் வரை பூத்து மழைக்காலங்களில் காய்ப்பவை.
நல்ல வளமான மண் மட்டுமின்றி கரம்பு நிலங்கள், சமவெளி பகுதிகள், நெய்தல் நிலங்கள் முதல் 3000 அடி உயரமுள்ள பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன.
இதன் இலை, காய், வேர் முதலியன மருத்துவப் பயன்கொண்டவை. வாத நோய், வீக்கம் கரைத்தல், மலச்சிக்கல் போன்ற நோய்களை குணப்படுத்த இவை பயன்படுத்தப்படுகின்றன.
சங்க காலம் முதல் இம்மாவட்ட மக்கள் பல அரிய மூலிகைகளை  பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அரிய மூலிகைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும்.
















4 comments:

  1. அற்புதமான தகவல்கள் அருமையான சேவை. நன்றி. வாழ்க. வணக்கம்

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்கள்
    நன்றி.

    ReplyDelete
  3. Thank you sir. You have a good heart

    ReplyDelete
  4. அரிய மூலிகைகள் பற்றிய அருமையான தகவல்கள்.
    இராமனாதபுரம் மாவட்டம் வறண்ட பகுதி என்ற எண்ணமே மக்களிடையே மேலோங்கியுள்ளது. பல அற்புதமான மூலிகைகள் இயற்கையாக வளர்ந்துள்ளதை கவனித்துள்ளேன். மக்களும்,ஆட்சி மன்றங்களும் இயற்கை வளத்தை அறியாமல் அழித்துவருவது வேதனை!

    ReplyDelete