Pages

Monday 19 November 2018

திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேதுபதி கோட்டைகள் பற்றிய புகைப்படக்கண்காட்சி


இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் சேதுபதி கோட்டைகள் என்ற தலைப்பில் புகைப்படக்கண்காட்சி  11.10.2018 அன்று நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு மாணவன் பு.தர்மபிரபு  வரவேற்றார். 

மன்றப் பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு கண்காட்சியை திறந்து வைத்தார்.  கண்காட்சியில் கமுதி, செங்கமடை ஆறுமுகக்கோட்டை, இராமநாதபுரம், திருமயம், திருப்புல்லாணி ஆகிய ஊர்களில் உள்ள கோட்டைகளின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கோட்டைகள் பற்றிய தகவல்களை ச.பிரியதர்ஷினி, ஜெ.சுகுணா, மு.பேச்சியம்மாள், .வினோதினி, மு.முகம்மது லபிப், கு.யோகாஸ்ரீ ஆகிய மாணவ மாணவிகள்  கூறினர்.
ஏழாம் வகுப்பு மாணவி வி.டோனிகா நன்றி கூறினார். ஆறாம் வகுப்பு மாணவி ஜீ.ஹரிதா ஜீவா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, தனலட்சுமி மாணவர்கள் மு.சுதர்ஸன், முஜிபு ரகுமான் ஆகியோர் செய்திருந்தனர்.

நாளிதழ் செய்திகள்





 

Sunday 4 November 2018

திருவாடானை அருகே மாஞ்சூரில் நிலத்தை ஒத்திவைத்து கோயிலில் விளக்கு ஏற்றுவதற்கு வழங்கப்பட்ட தானம் கி.பி.13 ஆம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டில் தகவல்



ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மாஞ்சூரில் அழிந்த நிலையில் உள்ள  சிவன் கோயிலில் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 5 கல்வெட்டுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இவை சிவன் கோயிலில் விளக்கு ஏற்றுவதற்கு நிலம், தங்கம், பொற்காசுகள், நெல் ஆகியவற்றைத் தானமாக வழங்கிய தகவலைச் சொல்லும் கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள்.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, செயலாளர் சோ.ஞானகாளிமுத்து, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் மாஞ்சூரில் மேற்கொண்டிருந்த களஆய்வின் போது, அவ்வூரைச் சேர்ந்த மூர்த்தி சிவன் கோயிலில் கல்வெட்டுகள் இருப்பதாக அளித்த  தகவலைத் தொடர்ந்து ஆய்வுக்குழுவினர் பிற்காலப் பாண்டியர்களின் 5 கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துப் படி எடுத்தனர்.

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,

கல்வெட்டுகளில் இவ்வூர் பெயர் அரும்பொற்கூற்றத்தைச் சேர்ந்த மாஞ்சிலான மானமாணிக்கநல்லூர் எனவும், இக்கோயில் இறைவன் பெயர் திருவரகரீஸ்வரமுடைய நாயனார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   மாஞ்சில் எனும் ஊர்பெயர் தற்போது மாஞ்சூர் என மாறியுள்ளது. மாஞ்சில் எனும் ஒரு மூலிகைத்தாவரத்தின் பெயரால்  இவ்வூர் அமைந்துள்ளது. சடைமுடி போன்று காணப்படும் இதன் வேரிலிருந்து நறுமணத் தைலம் தயாரித்து முற்காலத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

இரண்டு கல்வெட்டுகள் முதலாம் மாறவர்மன் குலசேகரன் காலத்தையும், மற்ற இரண்டும் முறையே சடையவர்மன் சீவல்லவன், மாறவர்மன் விக்கிரமபாண்டியன்  காலத்தையும் சேர்ந்தவை. ஒரு கல்வெட்டு கோனேரின்மை கொண்டான் எனும் அரசாணை கல்வெட்டு ஆகும்.

சுற்றுச் சுவர்களுடன் கூடிய சிறிய அளவிலான இக்கோயில், கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்பில் இருந்துள்ளது. தற்போது இவை அழிந்தநிலையில் உள்ளன. சோழர் கால அமைப்பில் உள்ள இக்கோயில் கி.பி.10-11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம்.

கி.பி.1268இல் மாறவர்மன் குலசேகரப்பாண்டியனின் முதலாம் ஆட்சியாண்டில்  திருநுந்தாவிளக்கு  ஏற்றுவதற்காகவும், முப்பது வட்டத்து சிவப்பிராமணர் உபயத்துக்காகவும் பஞ்சசலான 1 அச்சு ஒன்பதை பொன்னம்பலக் கூத்தனான அவனி நாராயண விழுப்பரையன் தானமாக வழங்கியுள்ளார். பஞ்சசலான 1 அச்சு என்பது தென்பாண்டி நாட்டில் வழக்கில் இருந்த ஐந்து புள்ளியிட்ட அச்சுடன் கூடிய பழைய பொற்காசு. முப்பது வட்டத்து சிவப்பிராமணர் கோயிலில் முறைவைத்து பூஜை செய்பவர்கள் எனத் தெரிகிறது.

இதே மன்னரின் 15ஆம் ஆட்சியாண்டான கி.பி.1283இல் சோலைஅரசு தில்லைநாயகன் திருநுந்தாவிளக்கு ஒன்றுக்காக கட்டிகுடியில் வரி நீக்கப்பட்ட ஒரு நிலத்தையும், அரையன் பட்டாலகன் என்பவர் ஒத்தி வைத்த நிலத்தின் மூலம் கிடைத்த பொன் எட்டரை, அரைக் கழஞ்செய், நாலு மஞ்சாடி, மூன்று மா,  பழங்காசு இரண்டு, ஐந்து கலம் நெல் ஆகியவற்றையும் தானமாக வழங்கியுள்ளார். கட்டிகுடி இவ்வூரிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது.

கி.பி.1296 இல், மாறவர்மன் விக்கிரமபாண்டியனின்  14ஆம் ஆட்சியாண்டில்  இவ்வூர் பட்டாலகன் சுந்தரதோளன் ஆன களபாளராயன் கோயிலில் திருநுந்தாவிளக்கு ஏற்ற வரியில்லா நிலத்தைத்  தானமாகக் கொடுத்துள்ளார்.

கி.பி.1300இல் சடையவர்மன் சீவல்லவன் தனது ஒன்பதாம் ஆட்சியாண்டில்  இவ்வூரில் தேவதானமாகக் கொடுத்த இடத்துக்கு கிடைக்கும் கடமை, அந்தராயம், வினியோகம் ஆகிய வரிகளைப் பெற்று கோயிலில் அமுதுபடி உள்ளிட்ட நிமந்தங்களுக்கு  பயன்படுத்த ஊராற்கு ஓலை வழங்கியுள்ளார்.

கல்வெட்டுகளில் இவ்வூரைச் சேர்ந்த தென்னவன் முதலி நாட்டு மூவேந்த வேளான், சோலைஅரசு தில்லைநாயகன், பட்டாலகன் சுந்தர தோளன் ஆன களபாளராயன், பொன்னம்பல கூத்தனான அவனி நாராயண விழுப்பரையன், அரையன் பட்டாலகன் ஆகிய அரசு அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன.

அப்பி வெட்டி, விரால புரளி ஆகிய நிலத்தின் பெயர்களும், பொன் எட்டரை, கழஞ்செய், மஞ்சாடி, மா ஆகிய தங்கத்தின் நிறுத்தல் அளவுகளும் முந்திரிகை, முக்காணி, மாவரை ஆகிய நிலஅளவுகளும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்









Tuesday 28 August 2018

பவளப்பாறைகளால் உருவான தனுஷ்கோடி மரபுநடை நிகழ்ச்சியில் தகவல்




இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபுநடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. ஏழாம் மரபுநடை நிகழ்வு 26.08.2018 அன்று தனுஷ்கோடியில் நடந்தது. இதில் தனுஷ்கோடியின் பெரும்பான்மையான கட்டடங்கள் பவளப்பாறைக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் அனைவரையும் வரவேற்றார். 

நிகழ்வுக்குத் தலைமை வகித்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது, இராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையான இராமேஸ்வரம் தீவில் பண்பாடும் இயற்கைத் தாவரங்களும் பரவி அழகுபடுத்துகின்றன. பறவைப் பார்வையில் இத்தீவு கைப்பிடியுள்ள ஒரு வாள் போன்ற அமைப்பில் உள்ளது


பாம்பு போன்று அமைந்துள்ளதால் பாம்பன் கால்வாய் என  அழைக்கப்படுகிறது. குதிரை தாண்டும் தூரத்தில் இருந்த இக்கால்வாய், கி.பி.1480ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் பெரிதானது. கி.பி.1639இல் திருமலை நாயக்கரின் தளபதி இராமபையன், பாம்பனில் ஒளிந்து கொண்ட தளவாய் சேதுபதியை பிடிக்க பாம்பன் கால்வாயில் முதன்முதலாக ஒரு பாலம் ஏற்படுத்தினார்


இராமேஸ்வரம் கோயிலுக்கு பாண்டியர், சோழர், இராஷ்டிரகூடர், இலங்கை மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்கர்கள், சேதுபதிகள் ஆகியோர் திருப்பணி செய்துள்ளார்கள். இராமேஸ்வரம் அருகில் அரியாங்குண்டு பகுதியில் ஒரு பெரிய பௌத்தப் பள்ளி இருந்துள்ளது. இங்கு புத்தரின் கற்சிற்பமும் கிடைத்துள்ளது


தனுஷ்கோடியில் வங்காளவிரிகுடாவும், மன்னார் வளைகுடாவும் ஒன்றாகச் சங்கமிக்கும் அரிச்சல்முனை பகுதி,  அம்புமுனை போல உள்ளதால் தனுஷ்கோடி என பெயர் வந்துள்ளது. சங்க இலக்கியமான அகநானூறில்  மதுரைத் தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் எனும் புலவர் இராமன் தனுஷ்கோடி ஆலமரத்தடியில் வேதம் ஓதிய செய்தியைக் குறிப்பிடுகிறார்.

இரட்டைத்தாழை முனியசாமி கோயிலில் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது. இது முன்னூற்றுவர், வளஞ்சியர், திசைஆயிரத்து ஐந்நூற்றுவர் ஆகிய வணிகக் குழுவினர் இணைந்து இராமேஸ்வரத்தில் செய்த தர்மத்தைக் குறிப்பிடுகிறது


முஸ்லிம்களின் கல்லறையின் மேல் நீளமான ஒரு தூண் கட்டப்பட்டிருப்பதைகோரிஎன்கிறார்கள்.  இது குத்துக்கல் அல்லது நெடுங்கல் போன்ற அமைப்பில் உள்ளது. கோரிகள் தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. குந்துகால் மற்றும் குருசடித் தீவிற்கு இடையில் கடலில் ஒரு கோரி உள்ளது.


கி.பி.1162இல் திருநெல்வேலியை ஆண்டு வந்த சடையவர்மன் குலசேகரபாண்டியன் மதுரையை ஆண்டுவந்த பராக்கிரம பாண்டியன் மீது போர் தொடுத்து மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான். அப்போது உதவிக்கு வந்த இலங்கை படை, குந்துக்கால் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டதாக  மகாவம்சம் கூறுகிறது. குருசடித் தீவிற்கும், பாம்பனுக்கும் இடையில் உள்ளது குந்துக்கால்வாய். குந்து என்பவர் பெயரால் இக்கால்வாய் அழைக்கப்படுகிறது. சமண மதத்தின் 17வது தீர்த்தங்கரர் குந்துநாதரால் இப்பெயர் வந்திருக்கலாம்


இராமேசுவரம் தீவில் பாரம்பரியத் தாவரங்களாக மண்ணரிப்பைத் தடுக்கும் தாழை மரங்கள், அடும்புக்கொடி ஆகியவை காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பொந்தன்புளி மரங்கள் தங்கச்சிமடம், இராமேசுவரத்தில் உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.


கமுதி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை முதுகுளத்தூர் கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி, ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சுபலட்சுமி பஜாஜ் உரிமையாளர் அரு.சுப்பிரமணியன், தாமோதரன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பாம்பன் பாலம், அழிந்துபோன தனுஷ்கோடி, பொந்தன்புளி,  தாழை மரங்கள், அடும்புக்கொடி ஆகியவற்றை நேரில் பார்த்து அறிந்துகொண்டனர். தனுஷ்கோடி பற்றிய சிறு நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இராமேஸ்வரம் முஹம்மது ராஃபி அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார்.

 நாளிதழ் செய்திகள்