Pages

Sunday 18 July 2021

மக்கள் வழிபாட்டில் பிரமாண்டமான பொந்தன் புளி மரங்கள்

 


வெளிநாட்டிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்த பிரமாண்டமான பொந்தன் புளி மரங்களை மக்கள் புனிதமாகக் கருதி வழிபட்டுவருவதால் அவை அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,

தமிழ்நாட்டின் மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில், இயற்கையாக அமைந்த உப்பங்கழிகள் மூலம் பல இயற்கைத் துறைமுகங்கள் உருவாகியுள்ளன. இதனால் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் பலர் பழங்காலம் முதல் இங்கு வந்து தங்கிச் சென்றுள்ளனர்.

அவ்வாறு வந்த அரேபிய நாட்டு வணிகர்களால் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட பொந்தன் புளி மரங்கள் ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளன. அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளுக்கு தீவனமாக பொந்தன்புளி மரத்தின் இலைகள், கனிகள், காய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக இம்மரத்தின் விதைகள் பாலைவனப் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு பாண்டிய நாட்டின் பல பகுதிகளில் நடப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ராமநாதபுரம், தேவிபட்டினம், சேந்தனேந்தல், அழகன்குளம், ஏர்வாடி தர்கா, புல்லந்தை, மும்முடிச்சாத்தான், தேரிருவேலி, அருங்குளம், பனைக்குளம், சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல், மதுரை அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் இம்மரங்கள் வளர்ந்து வருகின்றன. இலங்கையிலும் மன்னார் உள்ளிட்ட பல இடங்களில் இம்மரங்கள் காணப்படுகின்றன.

25 மீட்டர் வரையிலும் உயரமாக வளரக்கூடிய இதன் அடிமரத்தின் சுற்றளவு சுமார் 14 மீட்டர் வரை இருக்கும்.  அத்துடன் நேராக உருளை வடிவில் வளர்ந்து உச்சியில் கிளைகளைப் பரப்புகிறது. ஐவிரல் அமைப்புடைய இலைகள், இயற்கையாக உருவாகக் கூடிய பெரிய அளவிலான பொந்துகள், யானை போன்ற மிகப் பிரமாண்டமான அடிமரம், பயன்தரும் கனிகள், பட்டைகள் ஆகியவை இம்மரத்தின் சிறப்புகள். ஓராண்டில் ஆறு ஏழு மாதங்கள் வரை இதில் இலைகள் உதிர்ந்து காணப்படும். நீண்ட காம்புகளில் பழுப்பு நிறத்தில் உருவாகும் இதன் காய், பழங்கள் நீண்ட நாட்களுக்கு மரத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கும். இம்மரங்கள் சாதாரணமாக 2000 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை.

இதன் பிரமாண்டம், பொந்து போன்ற அமைப்பு, இலைகளின் புளிப்பு சுவை ஆகியவற்றால் இந்த மரத்தை தமிழர்கள் பொந்தன்புளி, யானைமரம், ஆனைப்புளி, பெருக்கமரம், பப்பரப்புளி என பல பெயர்களில் அழைக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் போபாப் என்கிறார்கள்.

ராமநாதபுரம் பெரியார் நகர், ஏர்வாடி ஏரான்துறை, அழகன்குளம்,  தங்கச்சிமடம், தேவிபட்டினம் உள்ளிட்ட இடங்களில் இம்மரத்தை மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். ஏர்வாடியில் இருந்த இரண்டு மரங்களில் ஒன்று பட்டுப்போய் விட்டது. அம்மரம் இருந்த இடத்தில் தற்போது முனீஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பெரியார் நகரில் வெட்டிச் சாய்க்கப்பட்ட மரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதில் 10 பேர் அமரக்கூடிய அளவிலான பெரிய பொந்து உள்ளது. தேவிபட்டினத்தில் உள்ள உலகம்மன் கோவில் வளாகத்தில் இம்மரம் புனிதமாக பாதுகாக்கப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டதாக இருந்தாலும் பிரமாண்டமான இம்மரங்களை பல இடங்களில் மக்கள் புனிதமாகக் கருதி வழிபட்டு பாதுகாத்து வருகிறார்கள். இதனால் இம்மரம் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டு வருகிறது.


நாளிதழ் செய்திகள்





No comments:

Post a Comment