தமிழ் நாட்டின் நெற்களஞ்சியமாகத்
திகழும் தஞ்சாவூர், பாரம்பரியச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள்
ஆகியவற்றுக்கு சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.
இங்கு காவிரி ஆற்றின்
தென்கரையில் அமைந்துள்ளது மிகப் பிரமாண்டமான தஞ்சை பெரிய கோயில். இது முழுவதும் கற்களால்
கட்டப்பட்ட சிவனுக்கான கற்றளி ஆகும். இந்தியாவிலுள்ள பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று.
மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தான். இக்கோயில் கி.பி.1003 முதல்
கி.பி.1010 வரையில் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 1000 ஆண்டுகள் பழம்பெருமை
கொண்டு விளங்குகிறது.
இக்கோயில் 1987ஆம் ஆண்டு
யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது பெருவுடையார் கோயில்,
ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் தமிழர்களின் கட்டடக்கலை, சிற்பக்கலை,
ஓவியக்கலை ஆகியவற்றிற்குச் சான்றாக விளங்குகிறது.
இரண்டு அல்லது மூன்று
தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி
சமவெளிப் பகுதியில், ஏறத்தாழ 50 கி.மீ. தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கற்களைக்
கொண்டு, 240 மீட்டர் நீளமும், 120 மீட்டர் அகலமும் கொண்ட பெரும்பரப்பில் இக்கோயில்
அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில், கருவறை, அர்த்த
மண்டபம், மகா மண்டபம், நுழைவு மண்டலம் ஆகிய அங்கங்களைக் கொண்டுள்ளது. இங்கு கேரளாந்தகன்
திருவாயில், இராஜராஜன் திருவாயில், விக்கிரமசோழன் திருவாயில் ஆகிய கோபுர நுழைவு வாயில்கள்
உள்ளன.
இக்கோயிலின் விமானம்
பெரியதாகவும், கோபுரம் சிறியதாகவும் உள்ளது இதன் சிறப்பு. இதன் விமானம் 15 தளங்களுடன்
216 அடி உயரத்தில் எகிப்து பிரமிடுகளைப் போல அமைந்துள்ளது. இதன் சிகரம் 80 டன் எடையுள்ளது.
இது எட்டுத் துண்டுகளால் ஆனது. இக்கோயில் இரட்டைச் சுவர்கள் கொண்ட அடித்தளம் கொண்டுள்ளது. கருவறையைச் சுற்றிவரும் வகையில் திருச்சுற்று அமைக்கப்பட்டு
அதன் சுவர்களில் ஓவியங்களும், சிற்பங்களும் உள்ளன.
காஞ்சிபுரத்தில் உள்ள
கைலாசநாதர் கோயில் போன்று இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் தலைமைச் சிற்பி
வீரசோழன் குஞ்சர மல்லன் ராஜராஜப் பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கோயில் கருவறையில்
உள்ள லிங்கம் மிகப்பெரியது. ஆவுடையார், லிங்கம் ஆகியன தனித்தனி கற்களால் செதுக்கப்பட்டு
ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இதன் லிங்கமும் நந்தியும் ஒரே உயரமுடையன. இங்குள்ள நந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இது
இந்தியாவில் உள்ள நந்திகளில் இரண்டாவது பெரியதாகும்.
விமானத்தில் எங்கும்
செங்கலோ, மரமோ பயன்படுத்தப்படவில்லை. கற்களை
இணைப்பதற்கு சாந்து எதுவும் இல்லை. கற்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன.
மேலுள்ள கற்களின் அழுத்தத்தில் கீழுள்ள கற்கள் நிற்கின்றன.
No comments:
Post a Comment