Pages

Tuesday 17 September 2019

நீலகிரி மலை ரயில் - வே.இராஜகுரு




நீலகிரி மலை ரயில் பாதை 1,000 மில்லிமீட்டர் அளவு கொண்ட குறுகியப் பாதை வகை இரயில் போக்குவரத்து ஆகும். தெற்கு இரயில்வே இப்பாதையில் இரயில்களை இயக்குகிறது. இந்தியாவிலுள்ள பற்சக்கர ரயில் பாதை நீலகிரி மலை ரயில் பாதை மட்டுமே ஆகும். 

நீராவி இயந்திரம் மூலம் இந்த மலை இரயில் இயங்குகிறது. குன்னூரிலிருந்து உதகமண்டலம் வரையுள்ள பாதையில் மட்டும் இந்த இரயில் டீசல் இயந்திரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சூலை 2005இல் நீலகிரி மலை இரயில் பாதையை உலக பாரம்பரியச் சின்னமாக  யுனெஸ்கோ அறிவித்தது.

ஆங்கிலேயர்கள் 1854ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி வரை ஒரு மலைப்பாதையை அமைக்கத் திட்டமிட்டனர். ஆனால் 1899இல் தான் இப்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. 

மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரையிலான மலைப்பாதையைக் கடக்க நீலகிரி மலை இரயில் பற்சட்டம் மற்றும் பற்சக்கரங்களால் இயங்கும் நீராவி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. 

நீலகிரி மலை இரயில்வே எக்சு வகை நீராவி பற்சட்ட இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது. சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் இவ்வியந்திரத்தை தயாரித்துள்ளது. குன்னூரிலிருந்து உதகமண்டலம் செல்லும் பயணிகளுக்கு இந்த இழுபொறியால் நீலகிரி மலை இரயில் பயணத்திற்கு ஒரு தனித்துவமான அழகு கிடைக்கிறது. இப்பாதை 46 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இதில் 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் உள்ளன. இதில் பயணிப்பது இனிய அனுபவம் ஆகும். 

இது ஆசியாவில் மிகக் கடுமையான சரிவு பாதையாகக் கருதப்படுகிறது. இப்பாதையில் மேட்டுப்பாளையம், குன்னூர், வெல்லிங்டன், அரவங்காடு, கேத்தி, லவ்டேல், உதகமண்டலம் ஆகிய இரயில் நிலையங்கள் உள்ளன.

No comments:

Post a Comment