Pages

Sunday, 19 August 2018

நெய்தல் நிலத்தின் முற்காலச் சூழலை அறிந்துகொள்ள இயற்கைப் பாரம்பரிய மரபுநடை பயணம்




ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம், பாரம்பரியம்மிக்க இடங்களை நேரில் கண்டு அவற்றின் சிறப்புகளை அறிந்துகொள்ள மரபுநடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நடத்திவருகிறது. இதன்படி இம்மாத நிகழ்வு, நெய்தல் நிலத்தின் முற்காலச் சூழலை தெரிந்துகொள்ள இயற்கைப் பாரம்பரிய மரபுநடையாக உப்பூர் அருகில் உள்ள காரங்காடு சூழியல் பூங்காவில்  24.06.2018 அன்று நடந்தது. நிறுவனத்தின் செயலாளர் சோ.ஞானகாளிமுத்து அனைவரையும் வரவேற்றார்.


இதில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது, “2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடற்கரைச்சோலைகள், துறைமுகங்களின் சூழலை சங்க இலக்கியங்கள் வருணிக்கின்றன. பழமை மாறாமல் ஒரு கடற்கரைச்சோலையும், துறைமுகமும் இருந்திருந்தால் அது எப்படி இருக்குமோ அத்தகைய சூழல் தற்போதும் காரங்காட்டில் காணப்படுகிறது.
துறைமுகம்

தமிழ்நாட்டின் 1076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் சுமார் 250 கி.மீ. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. சுந்தரபாண்டியன்பட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான பகுதிகளில் ஓடைகள், காட்டாறுகள் அதிகமாக உள்ளன. இவை கடலில் கலக்கும் இடங்களில் உள்ள உப்பங்கழிகள் மூலம் பல இயற்கைத் துறைமுகங்கள் உருவாகியுள்ளன. பழங்காலத்தில் கரையிலிருந்து பல கி.மீ தூரத்தில் ஆழ்கடலில் நிற்கும் கப்பல்களிலிருந்து படகுகளில் சரக்குகளை ஏற்றி வந்து கரையில் இறக்குவதற்கு உப்பங்கழிகள் உதவியாக இருந்துள்ளன.

பொ.ஆ.13, 14ஆம் நூற்றாண்டுகளில் முத்தூற்றுக்கூற்றம் எனும் நாட்டுப்பிரிவில் தொண்டி, நானாதேசிப்பட்டினம், சுந்தரபாண்டியன்பட்டினம், முத்துராமலிங்கபட்டினம், பாசிப்பட்டினம், நீர்ப்பட்டினம் ஆகிய துறைமுகப் பட்டினங்கள் இருந்ததாக கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. 


தீர்த்தாண்டதானத்தில் உள்ள சிவன் கோயில் கல்வெட்டுக்கள் இவ்வூரை திட்டானம் என்றும் இங்கு வணிகக்குழுக்கள் தங்கி இருந்ததையும் குறிப்பிடுகிறது. திட்டானம்  என்றால் மரக்கலம் நிறுத்தும் மேட்டுப்பகுதி என்று பொருள். இதன் அருகில் உள்ள ஊர் வட்டானம். வட்டானம் என்பது வட்டவடிவமான மரக்கலத்தைக் குறிக்கிறது. இங்கு வட்டவடிவமான பரிசல் கட்டும் தொழில் நடந்திருக்கலாம். தளி மருங்கூர் ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் வீரகேரளபுரமான நானதேசிப்பட்டினம் என பெயர் பெற்றிருந்தது. 



காரங்காடு தேவாலயத்தின் பின்புறம் உள்ள உப்பங்கழிப் பகுதியில் அதிகளவில் பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூரில் இருந்து இலங்கைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மண்பானைகள் ஏற்றுமதியானதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். மேலும் இவ்வூரில் உள்ள இயற்கையான உப்பங்கழி ஒரு சிறந்த இயற்கைத் துறைமுகமாக காட்சியளிக்கிறது. எனவே கல்வெட்டுகள் சொல்லும் நீர்ப்பட்டினம் எனும் துறைமுகம் காரங்காடாக இருக்கலாம்.

சூழியல் பூங்கா

காரங்காடு கடற்கரை களிமண்பாங்கானது. இங்கு கோட்டைக்கரை ஆறு மூன்றாகப் பிரிந்து கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் இயற்கையான சதுப்பு நிலக் காடுகள் 5கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளன. உப்பங்கழியின் இருபுறமும் அழகாக வளர்ந்துள்ள இக்காடுகள் கண்ணுக்கு விருந்தாகிறது.  


ஆழம் குறைவான இப்பகுதி அரியவகைப் பறவைகள், கடல் விலங்குகள், தாவரங்களின் இருப்பிடமாக விளங்குகிறது. இங்கு பல ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இவை சுற்றுச் சூழலையும், மண் வளத்தையும் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை” இவ்வாறு அவர் கூறினார்.


       நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கமுதி வெள்ளைப்பாண்டியன், ராமநாதபுரம் நிவாஸ்சங்கர், ஆசிரியர் பேரையூர் முனியசாமி ஆகியோர் செய்திருந்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு நெய்தல் நிலத்தின் முற்காலச் சூழலை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.


நாளிதழ் செய்திகள்








No comments:

Post a Comment