·
தமிழக ஓவியக்கலை வரலாற்றில் தலையாய இடம் பெற்றவை –
சித்தன்னவாசல்.
·
அறிவர் கோயில் என்னும் சமணர் குடைவரைக்கோயில் முற்காலப்
பாண்டியர் காலத்தில் கி.பி.ஏழாம் நுற்றாண்டில் குடையப்பட்டதாகும்.
·
மேற்கு நோக்கிய இக்குடைவரைக்கோயில் கருவறை மற்றும்
முகமண்டபத்தை உள்ளடக்கியது. கருவறையின் பின்பக்கச் சுவரில் மூன்று சமண
தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
·
முகமண்டபத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் பார்சுவநாதர்
மற்றும் சமண ஆசான்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.
·
முகமண்டபத்தின் விதானம் மற்றும் தூண்களின் மேற்பகுதி
ஆகியவற்றில் தாவர வண்ணங்களிலான ஓவியங்கள் அழகுற தீட்டப்பட்டுள்ளன.
·
சமண மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சமவசரணத்தை’ எடுத்துக்காட்டுவது போன்று தாமரைக் குளத்தில் மலர் சேகரிக்கும் ஆண்கள், விலங்குகள்,அன்னம்
போன்ற பறவைகள், மீன்கள் மற்றும் தாமரை,அல்லி மலர்களும் விதானத்தில்
சித்தரிக்கப்பட்டுள்ளன.
·
மேலும் அரசன்,அரசி மற்றும் நடன மகளிர் உருவங்களும்
தூண்களின் மேல்பகுதியில் தீட்டப்பட்டுள்ளன.
அஜந்தா குகை ஓவியங்களை ஒத்துள்ள இவை தென்னக ஓவியக்கலை வளர்ச்சிக்கு முன்னோடி
எனலாம்.
·
இங்குள்ள முற்காலப்பாண்டிய மன்னன் அவனிபாதசேகரன்
ஸ்ரீவல்லபனுடைய (கி.பி.815-862) கல்வெட்டு மூலம் இளங்கௌதமன் என்னும் மதுரை
ஆசிரியரால் இக்கோயில் கருவறையை செப்பனிட்டமை மற்றும் முகமண்டபத்தைக் கட்டியமை ஆகிய
திருப்பணிகளை அறிய முடிகிறது.
No comments:
Post a Comment