அரைமலை என்னும்
பெயர் கொண்ட கழுகுமலையில் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மூன்று உள்ளன. அவை
1. முருகன்
கோயில்
2. வெட்டுவான்
கோயில்
3. சமணப்பள்ளி
முருகன் கோயில்
பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் பிற்காலத்தில் விஜய நகர மன்னர்களால் கட்டுமானக் கோயில்
மற்றும் தெப்பக்குளத்துடன் மேம்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
மலையின் கிழக்குப்புறம் உள்ள வெட்டுவான் கோயில் ஒரே கல்லில்
செதுக்கப்பட்டுள்ளது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.50 மீட்டர் ஆழத்திற்குச்
சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதியைக் கோயிலாகச் செதுக்கியுள்ளனர். இது பாண்டிய
கால குடைவரைக்கோயில் கலைப்பணிக்குச்
சான்றாக உள்ளது. இது எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப்போன்று ஒற்றைக்
கற்கோயிலாகும். எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இக்கோயில் சிற்ப வேலைப்பாடு
நிறைந்தாக உள்ளது. கோயில்பணி முற்றுப்பெறவில்லை. சிகரம் மட்டும்
முற்றுப்பெற்றுள்ளது. இதில் கருவறையும் அர்த்தமண்டபமும் உள்ளன.
மேற்குப்புற மலையின் சரிவில் பாண்டிய மன்னன் பராந்தக
நெடுஞ்சடையன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ள சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்
உள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள்
ஆகியோர் நினைவாக இங்கு சிற்பங்கள் உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணப்பள்ளியும் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு சமண சித்தாந்தம்
போதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment