Pages

Friday 19 November 2021

நவம்பர் 19-25 - உலகப் பாரம்பரிய வாரம் - தமிழரின் பாரம்பரிய கட்டடக்கலையில் கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள்

 


    பாரம்பரியப் பெருமை கொண்ட கோயில்களும், பள்ளிவாசல்களும் அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த கட்டடக்கலையை பின்பற்றியே கட்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

    நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினர் அறிந்து பயன்படுத்தவும், பாரம்பரியச் சின்னங்களை போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலகப் பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. 

    தமிழர்களின் பாரம்பரிய கட்டடக்கலையை பின்பற்றிக் கட்டப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் பற்றி ஆய்வு செய்துவரும் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றிக் கூறியதாவது,


    ராமநாதபுரத்தின் அநேக கடற்கரை கிராமங்களில் இஸ்லாமியர் பெருமளவில் வாழ்கிறார்கள். கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் இப்பகுதிகளில் இஸ்லாம் பரவி உள்ளது. திருப்புல்லாணி கோயிலில் உள்ள கி.பி.1247-ம் ஆண்டைச் சேர்ந்த, இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு, கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டினத்திலுள்ள பிழார் என்ற முஸ்லிம் பள்ளிவாசலுக்கு ஆம்பத்தூர், மருதூர் ஆகிய ஊர்கள் தானமாக வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. 

    தீர்த்தாண்டதானம் சிவன் கோயில் எதிரில் சிதைந்த நிலையில் இருந்த மண்டபத்தை கி.பி.1269-ல் அங்கு தங்கி இருந்த அஞ்சுவண்ணம் எனும் இஸ்லாமியர் உள்ளிட்ட வணிகக்குழுவினர் பழுதுபார்க்க ஒப்புக்கொண்டுள்ளனர். 

    கீழக்கரை பள்ளிவாசலில் உள்ள ஒரு இஸ்லாமியப் பெண்மணியின் கி.பி.1300-ம் ஆண்டைச் சேர்ந்த கல்லறைக் கல்வெட்டு மூலம் இவ்வூரில் கி.பி.12-ம் நூற்றாண்டுகளிலேயே முஸ்லிம்கள் குடியிருந்ததையும் இஸ்லாமியப் பள்ளி இருந்ததையும் அறியமுடிகிறது. வட்டானம் மற்றும் வாலிநோக்கத்தில் கி.பி.15-ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியப் பள்ளி இருந்ததை அங்குள்ள கல்லறைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.


    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரைப் பாறைகளையே அதிக அளவில் கோயில்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். கீழக்கரை, வேதாளை, வாலிநோக்கம், நரிப்பையூர் உள்ளிட்ட பள்ளிவாசல்களும் கடற்கரைப் பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட மணற்பாறைகளைக் கொண்டே கட்டப்பட்டுள்ளன. கோயில்கள் கட்ட பயன்படுத்திய  பாரம்பரிய கட்டடக்கலையையே பள்ளிவாசல்கள் கட்டவும் பயன்படுத்தியுள்ளனர். 

    பெரும்பாலான பழமையான பள்ளிவாசல்கள் தொழும் மாடம், மகாமண்டபம், முன்மண்டபம், தாழ்வாரம் என்ற அமைப்பில் காணப்படுகின்றன. இவற்றின் வெளிப்புறத்தில் அதிஷ்டானம், பாதசுவர், பிரஸ்தரம் ஆகிய அமைப்பு காணப்படுகிறது. தூண்களிலும், மேற்கூரையிலும் பலவிதமான பூக்களின் உருவங்கள் கோட்டுருவங்களாகவும் புடைப்புச் சிற்பங்களாகவும் வெட்டப்பட்டிருக்கும். கீழக்கரை, வேதாளை, நரிப்பையூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள் தமிழர்களின் பாரம்பரிய  கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளன.


    கீழக்கரையின் சில பள்ளிவாசல்களில் உள்ள தூண்கள் வெட்டுப் போதிகை, தாமரைப்பூ, வாழைப்பூ போதிகைகளோடு கூட்டுத்தூண்களாக கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பிற்காலப் பாண்டியர், சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கல்லுப்பள்ளிகளும் உள்ளன. அவற்றின் தூண்கள், போதிகைகள், கொடுங்கைகள் மூலம் அவற்றின் கலைப்பாணியை அறிய முடிகிறது. அதே காலகட்டத்தில் கட்டப்பட்ட திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை கோயில் தூண்களும் இதுபோலவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. தமிழ்நாட்டளவில் ஓர் ஆய்வினையே மேற்கொள்ளுமளவிற்கான அருமையான பொருண்மை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete