Pages

Showing posts with label புதுக்கோயில். Show all posts
Showing posts with label புதுக்கோயில். Show all posts

Sunday, 12 April 2026

ஆறும் மண்ணும் வரலாற்றை உருவாக்கும் காரணிகள் தொல்லியல் ஆய்வாளர் தகவல்

 




ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓடும் குண்டாறும், செம்பு நிற மண்ணும் வரலாற்றை உருவாக்கும் காரணிகள் என தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு தெரிவித்தார்.
ராமநாதபுரம் அருகேயுள்ள புதுக்கோயில், அரசு உயர்நிலைப் பள்ளியில் தொல்லியல் மரபு மன்றம் சார்பில் ‘வரலாற்று நோக்கில் ராமநாதபுர மாவட்டம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும் கண்காட்சியும் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் ம.மலைப்பாண்டி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் வழிவிட்ட அய்யனார் முன்னிலை வகித்தார். ஏழாம் வகுப்பு மாணவன் தி.துர்க்கேஷ் அனைவரையும் வரவேற்றார். தொல்லியல் மரபு மன்றச் செயலர் க.ராமச்சந்திரன் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றிக் கூறினார்.
திருப்புல்லாணி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப் பழமையான கீழைப் பழங்கற்கால கற்கோடரிகள் கமுதி குண்டாற்றுப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் நுண் கற்கருவிகள், இரும்புக் கால தொல் பொருட்களும் கிடைத்துள்ளன. இதன்மூலம் மிகப் பழமையான நாகரிகம் குண்டாற்றுப் பகுதியில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
செம்பு நிறத்தில் வளமான மண் கொண்ட திருப்புல்லாணி, பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதிகள் கீழ்ச்செம்பில் நாடு, வடதலைச் செம்பில் நாடு, ஏழுர் செம்பில் நாடு என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. அடி முதல் முடி வரை முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கோயிலை கற்றளி என்பர். இம்மாவட்டத்தில் சாயல்குடி அருகிலுள்ள மாரியூர், திருமாலுகந்தான்கோட்டை, நயினார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோயில்கள் கற்றளிகள் ஆகும். வணிகம், இயற்கைத் துறைமுகம், மண்வளம், கோயில், கல்வெட்டு, சமணம், பௌத்தம் என பலவற்றிலும் தமிழ்நாட்டில் அதிக தொல்லியல் தடங்கள் கொண்டதாக இம்மாவட்டம் விளங்குகிறது.” என்றார். ஏழாம் வகுப்பு மாணவி செ.ரியாரென்சி நன்றி கூறினார்.
பின்பு நடந்த கண்காட்சியில் மாவட்டத்தில் புதிதாக கண்டெடுக்கப்பட்ட பழைய, புதிய, நுண் கற்கால கருவிகள், பெருங்கற்கால தொல் பொருட்கள், கல்வெட்டுகளின் அச்சுப்படிகள், பாண்டியர், சோழர், சேதுபதிகள், பொந்தன் புளி, உகாய் மரம், கோயில்கள், இஸ்லாம், கிறித்தவம், சமணம், பௌத்தம் போன்ற தலைப்புகளில் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவ மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.