Pages

Showing posts with label தொல்லியல் மரபு மன்றம். Show all posts
Showing posts with label தொல்லியல் மரபு மன்றம். Show all posts

Sunday, 12 April 2026

தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட தொண்டி தொல்லியல் ஆய்வாளர் தகவல்

  




 இராமநாதபுரம் மாவட்டத்திலேயே, தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊராக தொண்டி திகழ்வதாக தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு தெரிவித்தார்.

    திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொல்லியல் மரபு மன்ற மாணவர்கள், அகழாய்வு, கல்வெட்டை அறிந்துகொள்ள, தலைமையாசிரியர் செல்வராஜ் வழிகாட்டலில், களப்பயணமாக தொண்டிக்கு வந்தனர். இவ்வூர் சிவன், திருமால், தொண்டியம்மன் கோயில்கள், பழமையான பள்ளிவாசல், அகழாய்வு நடந்த இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர். கோயில் கல்வெட்டுகளை மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு மாணவர்களுக்கு படித்துக் காட்டி அதை படியெடுக்கும் முறைகளையும் கற்றுக் கொடுத்தார். தொண்டி பற்றி அவர் கூறியதாவது,
    இராமநாதபுரம் மாவட்டத்தில் இலக்கியச் சான்றுகள் அதிகம் உள்ள ஊராக தொண்டி விளங்குகிறது. 2200 ஆண்டு பழமையான கீழவளவு தமிழிக் கல்வெட்டு, தொண்டியைச் சேர்ந்த இலவோன் என்பவரைக் குறிப்பிடுகிறது. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தொண்டி, கொண்டல் காற்று, கானல், தில்லைச்செடி, நெய்தல் மலர், நெல்வயல், வெண்ணெல் ஆகிய சூழலைக் கொண்டு இராமநாதபுர மாவட்ட தொண்டி தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், பாண்டிக்கோவை, நந்திக்கலம்பகம், யாப்பருங்கலக்காரிகை உரை ஆகியவற்றிலும் தொண்டி குறிப்பிடப்படுகிறது.
    சங்க காலம் முதல் துறைமுகப் பட்டினமாக இருந்த தொண்டியில் அகில், துகில், ஆரம், வாசம், கருப்பூரம் போன்ற ஜாவா, இந்தோனேசியா பொருள்கள் இறக்குமதியானதை சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. இவை இங்கிருந்து மதுரை சென்றுள்ளன. சிதம்பரேஸ்வரர், உந்திபூத்தப் பெருமாள், நம்புதாழை நம்பு ஈஸ்வரர் ஆகிய கோயில்களிலும், கைக்களான்குளத்தின் நடுவிலும் பழமையான பாண்டியர் கல்வெட்டுகள் உள்ளன.
    தூய்மையான மாணிக்கக் கற்களுக்குப் பெயர்பெற்ற இலங்கையில் இருந்து வாங்கப்பட்டு அவை விற்கப்பட்ட பேட்டைகளாக தொண்டி, பெரியபட்டினம், காயல்பட்டினம் விளங்கியுள்ளன. இதனால் இவ்வூர்கள் பவித்திரமாணிக்கப்பட்டினம் எனப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். ஆசிரியர்கள் கலையரசி, தனலட்சுமி, ரவி, தனகுருபாலன் மாணவர்கள் 25 பேர் களப்பயணமாக வந்திருந்தனர்.










'சிவகங்கை மாவட்டத் தொல்லியல்' கருத்தரங்கம்

 சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அழகப்பா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வரலாற்றுத்துறை சார்பில்  23.02.2026 அன்று நடைபெற்ற 'சிவகங்கை மாவட்டத் தொல்லியல்' என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கத்தில்  'தொல்லியல் தேடல்களில் கல்லூரி மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன்.