Pages

Showing posts with label தொல்பழங்காலம். Show all posts
Showing posts with label தொல்பழங்காலம். Show all posts

Monday, 20 August 2018

திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாட்டின் தொல்பழங்காலம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி




இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் தமிழ்நாட்டின் தொல்பழங்காலம்என்ற தலைப்பில்  கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. எட்டாம்வகுப்பு மாணவி தி.திவின்பிரியா வரவேற்றார். ஓவிய ஆசிரியர் .அன்பழகன் முன்னிலை வகித்தார்.

இக்கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்து கண்காட்சியைத் தொடங்கி  வைத்த பள்ளித் தலைமையாசிரியர் கூ.செல்வராஜ் பேசியபோது, ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மற்றும் சமூகஅறிவியல்  பாடங்களில் நமது பண்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதை வெறுமனே படித்து தேர்வுக்குத் தயாராவது என்பது இந்த பாடங்களின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும். இத்தகைய கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிகள் பாடங்களை எளிதாக்கி மாணவர்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன. இதன்மூலம்  பழமையை அறிந்து அதை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வை  மாணவர்களிடம் ஏற்படுத்தமுடிகிறது என்று கூறினார்


சமீபத்திய தொல்லியல் ஆய்வுகள் மூலம், மனித இனம் முதன் முதலில் தமிழ்நாட்டில் தான் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. பழமையான தமிழ் நூல்கள் கூறும் ஊர்கள், துறைமுகங்கள் போன்றவை அகழாய்வுகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் நுண்கற்கால, புதிய கற்கால, பெருங்கற்கால, சங்ககாலத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் நமது பண்பாட்டை அறிந்து, அதைப் பாதுகாப்பார்கள் என மன்றப் பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு கருத்தரங்கம் பற்றிய அறிமுக உரையின் போது தெரிவித்தார்.

கருத்தரங்கத்தில் பழைய கற்காலம் குறித்து .சந்திராஸ்ரீ, இடைக்கற்காலம் குறித்து மு.அனிஷா, புதிய கற்காலம் குறித்து .ஜமுனா, இரும்புக்காலம் குறித்து இரா.கோகிலா, சங்ககாலம் குறித்து .ஜாஸ்மின் ஆகிய ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் ஐந்துபேர் பேசினர். ஏழாம் வகுப்பு மாணவன் து.மனோஜ் நன்றி கூறினார். எட்டாம் வகுப்பு மாணவி கோ.பிரியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

      பின்பு நடந்த கண்காட்சியில் ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பழைய, இடைக்கற்கால, புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்கால, சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிக்கு  வைக்கப்பட்டிருந்தன. இவை எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதை மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் முகம்மது லபிப், முகம்மது நஜிப், அபுரார் அகமது ஆகியோர் செய்தனர்.


நாளிதழ் செய்திகள்
 





வீடியோ