Pages

Tuesday 29 August 2017

கமுதி அருகே பேரையூர் கண்மாய்க்குள் அழிந்து போன சிவன் கோவிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு




செங்கமடை பகுதியில் கல்வெட்டுகளை படிஎடுக்கும் ஆசிரியர்கள் வே.இராஜகுரு, கு.முனியசாமி, சா.செல்வக்குமார்


இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் கண்மாய்க்குள் சிதறிக் கிடக்கும் கற்கள் தூண்களிலே கல்வெட்டுகள் இருப்பதாக இவ்வூரைச் ஆசிரியர்கள் கு.முனியசாமி,  சா.செல்வக்குமார் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு அக்கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தார். இதுபற்றி அவர் கூறியதாவது,
கண்மாய்க்குள் கல்வெட்டுகள்
1985 ஆம் ஆண்டு பேரையூர் கண்மாயில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பின், இக்கண்மாயின் குமிழி மடை, செங்கமடை ஆகியவற்றை உயர்த்திக் கட்ட தோண்டியபோது, அப்பகுதிகளில் பெரிய அளவிலான கற்கள் புதைந்த நிலையில் இருந்து வெளிப்பட்டுள்ளன. அப்போது அம்மடைகளின் அருகிலேயே அக்கற்களை ஓரமாகப் போட்டுவிட்டு மடை கட்டியுள்ளனர். அதில் வெளிவந்த கற்களில் தான் கல்வெட்டுகள் உள்ளன. குமிழி மடையிலிருந்து செங்கமடை 400 மீட்டர் தொலைவில் உள்ளது.
சிவன் கோயில்  
குமிழி மடை பகுதியில் அதிகளவிலான கற்கள் சிதறிக் கிடக்கின்றன. இக்கற்களில் 9 கல்வெட்டுகளும், அதே கண்மாயின் செங்கமடை பகுதியில் இரு கல்வெட்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இவை துண்டுக்கல்வெட்டுகள் ஆகும். இக்கல்வெட்டுகள் யாவும் 13 ஆம் நூற்றாண்டு கால எழுத்தமைதியைப் பெற்றுள்ளன. இவை நான்கு காலகட்டங்களில் வெட்டப்பட்டுள்ளன. சில கல்வெட்டுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளன. இக்கல்வெட்டுகளை கொண்டு இக்கண்மாய் பகுதியில் சிவன் கோயில் இருந்து அழிந்துள்ளதை ஊகிக்கமுடிகிறது. அழிந்துபோன சிவன் கோயில் விமானத்தின் அடிப்பகுதியான ஜகதி, பட்டிகையில் இருந்த கற்களில் தான் கல்வெட்டுகள் உள்ளன.
கல்வெட்டு செய்தி
கி.பி.1238 முதல் கி.பி.1258 வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தி ‘பூமலர்த் திருவும் பொரு ஜய மடந்தையுந் தாமரை’ எனத் தொடங்கும். இங்குள்ள சில கல்வெட்டுகளில் அந்த மெய்க்கீர்த்தியின் சில பகுதிகள் இருப்பதால்,  இவற்றில் சில அவனுடைய காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியாகிறது. இதில் ஈழம், கடாரம், கவுடம், தெலிங்கம் ஆகிய நாடுகளின் பெயர்கள்  குறிக்கப்பட்டுள்ளன. மெய்க்கீர்த்தி ஒரு கை, இரு செவி, மும்மதம், நாற்கோட்டு என வரிசை சொற்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
கல்வெட்டில் உள்ள உத்தமபாண்டிய நல்லூர் என்னும் ஊர்,  மேலக்கொடுமலூர் ஆகும். இவ்வூர் சோழர் ஆட்சிக்காலத்தில் உத்தமசோழ நல்லூர் என இருந்ததை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் உத்தமபாண்டிய நல்லூர் என மாற்றியுள்ளான். கல்வெட்டில் உள்ள அண்டநாட்டுப் பெருமணலூர் மதுரை திருப்புவனம் அருகில் உள்ளது.
கல்வெட்டில் உள்ள நின்றாடுவான் வீரசோழ தேவனான குருகுலத்தரையன் என்பவர் சோழ நாட்டுப்பகுதியில் இருந்து இங்கு குடியேறியவராக இருக்கலாம். பாண்டிய நல்லூர் பட்டர் என்ற பிராமணர் பெயர் குறிப்பிடப்படுகிறது. விக்கிரப் பாண்டிய உத்தர மந்திரி என்ற ஒரு அரசு அலுவலர் பெயரும் உள்ளது. இரண்டாம் சுந்தரபாண்டியனின் பட்டத்து அரசி உலகமுழுதுடையார் பெயரும்  கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீளமான ஒரு தூணில் உள்ள கல்வெட்டில் திருக்காமக் கோட்டம், குடிதாங்கி, நல்லூர் என வருகிறது. திருக்காமக் கோட்டம் என்பது சிவன் கோயிலில் இருக்கும் அம்மனுக்கான கோயில் ஆகும். வெட்டிபாட்டம், பஞ்சுபீலி ஆகிய வரிகளின் பெயர்கள் காணப்படுகின்றன.


குமிழி மடை பகுதியில் சிதறிக் கிடக்கும் கற்கள்
இறையிலி
குறிப்பிட்ட சிலர் வைத்த நிவந்தங்களுக்காக அவர்கள் பெயரில் நடக்கும் பூசைக்கட்டளையை சந்தி என்பார்கள். காலை மாலை  பூஜைக்காக இக்கோயிலில் நல்லான் என்பவரால் நல்லான் சந்தி உருவாக்கப்பட்டிருந்திருக்கிறது. இதற்காகவும், வேண்டும் நிமந்தங்களுக்காகவும், இக்கோயிலுக்கு இறையிலி தேவதானம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நல்லூர் எனும் ஒரு ஊரை விற்று இருப்பதை அறியமுடிகிறது. மேலும் செங்கமடை பகுதியில் உள்ள கல்வெட்டில் ஆவுடைய நாச்சியார் என்பவரால் வழங்கப்பட்ட தேவதானம் சொல்லப்பட்டுள்ளது.
பேரையூர் அருகில் மருதங்கநல்லூர், நல்லூர் ஆகிய ஊர்கள் உள்ளன. கல்வெட்டுகளில் கூறப்படும் நல்லூர் இதில் ஒன்றாக இருக்கலாம்.
இவ்வாறு இறையிலியாய் விட்ட இடத்தின் எல்லை கூறும்போது, பள்ளிச்சந்தம் நீக்கி கொடுக்குமாறு வரும் தொடர்களால் இப்பகுதியில் சமண, புத்த கோயில்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. பள்ளிச் சந்தம் என்பது சமண புத்த கோயில்களுக்கு வழங்கப்படும் நிலதானம் ஆகும். 

செங்கமடை பகுதியில் சிதறிக் கிடக்கும் கற்கள்
விவசாயம்
இக்கல்வெட்டில் ஐப்பசிக் குறுவை, கோடைக் குறுவை ஆகிய விவசாய பருவங்கள் கூறப்பட்டுள்ளன. கரிசல்நிலம் கருஞ்செய் என கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. பத்து மா எனும் ஒரு நிலஅளவு இதில் உள்ளது.


நாட்டுப்பிரிவு
பெருங்கருணை எனும் ஊர் கோயிலில் உள்ள பாண்டியர் கால கல்வெட்டுகளில் இப்பகுதி சுந்தரபாண்டிய வளநாடு எனும் நாட்டுப்பகுதியாகக் குறிப்பிடப்படுகிறது. பேரையூரில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் பெருங்கருணை உள்ளதால் இவ்வூரும் அதே நாட்டுப்பகுதியில்  இருந்திருக்கலாம். மேலும் பெருங்கருணையில் உள்ள முதலாம் குலோத்துங்கசோழன் கல்வெட்டுகளில் இந்த நாடு மதுராந்தக வளநாடு என இருந்ததை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தனது பெயரில் சுந்தரபாண்டிய வளநாடு என மாற்றியுள்ளான்.
அழிந்த கோயில்
தற்போது கண்மாய்க்குள் இருக்கும் கற்களும், தூண்களும் கோயிலின் விமானத்தின் அடிப்பகுதியாக உள்ளன.  எனவே இக்கோயில் அழிந்து போன அல்லது அழிக்கப்பட்ட கோயிலாக இருக்கலாம். இவ்வூர் பேருந்து நிறுத்தம் அருகில் சில ஆண்டுகளுக்கு முன் குழி தோண்டியபோது புதைந்த நிலையில் சாமி சிலைகள் இருந்ததாக இவ்வூர் மக்கள் கூறினார்கள். அவை இந்த கோயிலின் சிலைகளாக இருக்கலாம்.

நாளிதழ் செய்திகள்
 













No comments:

Post a Comment