Pages

Saturday 18 June 2016

தொண்டி அருகே 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால சூலக்கல் கண்டுபிடிப்பு - வே.இராஜகுரு





இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற  பொறுப்பாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு தொண்டி பகுதியில் மேற்கொண்டிருந்த தொல்லியல் களஆய்வின் போது  சுந்தரபாண்டியன்பட்டினம் அருகில்  மருங்கூர் என்ற ஊரில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால சூலக்கல் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
இது பற்றி அவர் கூறியதாவது,
      மன்னர்கள் காலத்தில் வழிபாட்டுத்தலங்களில் தினசரி வழிபாடு நடைபெறவேண்டி, அவ்வழிபாட்டுத்தலங்களுக்கு நிலங்களை வரிநீக்கி தானமாக வழங்குவார்கள். அவ்வகையில் சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலதானம் தேவதானம் என்றும், திருமால் கோயில்களுக்கு வழங்குவது திருவிடையாட்டம் என்றும், சமண, புத்தப் பள்ளிகளுக்கு வழங்குவது பள்ளிச்சந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
      இவ்வாறு தானமாக வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் எல்லைக்கற்கள் நடப்பட்டு கோயில் நிலங்கள் பாதுகாக்கப்படும். சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கற்களும், திருமால் கோயிலுக்கு வழங்கும் நிலங்களின் எல்லைகளில் சக்கரம் பொறிக்கப்பட்ட திருஆழிக்கல்லும் எல்லைக்கற்களாக நடுவது வழக்கம்.
இத்தகைய சூலக்கற்களில் சந்திரனைக் குறிக்கும் பிறை வடிவமும் சூரியனைக் குறிக்கும் வட்டவடிவமும் இருக்கும். சூரியனும் சந்திரனும் இருக்கும் வரைக்கும் இந்த தர்மம் நிலைத்திருக்கும் என்பதன் அடையாளமாக இச்சின்னங்கள் இடப்படுகின்றன.  இக்கல்லில் எந்த மன்னர்கள் ஆட்சியில் வழங்கப்பட்டதோ அந்த மன்னர்களின் இலட்சினைகளும் இருக்கும். சில சூலக்கற்களில் நிலம் பற்றிய தகவல்கள் கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.
மருங்கூரில் உள்ள சூலக்கல்லில் சூலமும், அதன் மேல்பகுதியில் சூரியன், சந்திரன் வடிவமும், இடதுபுறம் பாண்டியரின் செண்டுகோலும் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகின்றன. இதில் சூரிய வடிவம் தேய்ந்த நிலையில் உள்ளது.  
மருங்கூருக்கு மிக அருகில் உள்ள தீர்த்தாண்டதானத்தில் சர்வதீர்த்தமுடையார் எனும் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள கி.பி.1198  ஆம் ஆண்டைச் சேர்ந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் காலத்திய கல்வெட்டில், சிவநிண்டகாலன் எனும் கண்டியூர் நாடாள்வான் என்பவர் இக்கோயில் பஞ்சநெடி தேசிநாயகருக்கு மருங்கூர் என்ற பண்டித சோழ சதுர்வேதமங்கலத்தைத் தானமாக வழங்கி உள்ளார் என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு மூலம், மருங்கூர் தீர்த்தாண்டதானம் கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. மருங்கூரில் கண்டுபிடிக்கப்பட்ட சூலக்கல், தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்க அப்போது நடப்பட்ட நான்கு கற்களில் ஒன்றாக இருக்கலாம். இச்சூலக்கல்லில் கல்வெட்டுக்கள் எதுவுமில்லை.
தற்போது இச்சூலக்கல் இவ்வூர் மகாகணபதி கோயில் எதிரே எல்லை முனீஸ்வரராக வழிபாட்டில் உள்ளது. சங்ககாலத்தில் பெரும் புகழுடன் விளங்கிய சங்க இலக்கியங்களில் சிறப்பாகக் குறிக்கப்படும் சங்ககால பாண்டியர்களின் ஒரு துறைமுகப் பட்டினமான மருங்கூர் பட்டினமாக  இவ்வூர் இருக்கலாம் என்ற கோணத்திலும் தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

நாளிதழ் செய்திகள் 

 

 

 


No comments:

Post a Comment