அகழாய்வு செய்யப்பட்ட இடம் இது சமையலறையாக இருக்கலாம்
மலையின்
மேல்பகுதியில் செங்கல்கள் சிதறிக் கிடந்த பகுதியில் ஒரு கட்டடப்பகுதியும், முதல்
குகைப்பகுதியின் கீழ்ப்பகுதியில் ஒரு
கட்டடப்பகுதியும் அகழாய்வில் கண்டறியப்பட்டன. அதில் கருப்பு மற்றும் சிவப்பு நிற
பானை ஓடுகள், சொரசொரப்பான பானை ஓடுகள், இரும்பு ஆணிகள், சுண்ணாம்புக் கலவை ஆகியவை
கிடைத்தன. செங்கல்களில் ஒன்றின் அளவு 35×18×6 செ.மீ. ஆகும். முதல் கட்டடப்பகுதி ஒரு வழிபாட்டுக்கூடமாகவோ
அல்லது கூட்ட அரங்காகவோ இருந்திருக்கலாம். அடுத்த கட்டடப்பகுதி சமையலறையாக அறியப்படுகிறது. இக்கட்டடப்பகுதிகள் BB300 B.C.E. முதல் BB1400 B.C.E. வரை மிகவும் புகழ் பெற்றதாக இருந்துள்ளது. மலையின்
மீது குகைகளுக்குச் செல்லும் வழிகள் அம்புக்குறியிட்டுக் கட்டப்பட்டுள்ளது.

முதல் குகையில் இரு கல்வெட்டுகள்
காணப்படுகின்றன. இக்குகையின் மேல்பகுதியில் வரலாற்றுக்கு முந்திய கால மக்களின்
ஓவியங்கள் காணப்பட்டதற்கான சுவடு காணப்படுகிறது. அடுத்ததாக அருகருகே அமைந்த இரு
குகைகள் உள்ளன. அவற்றில் பல கற்படுக்கைகளும் மூன்று கல்வெட்டுகளும் இருக்கிறது.
அதிலிருந்து மலையின் கிழக்கு சரிவில் கீழே
இறங்கினால் ஒரு குகை தென்படுகிறது. இங்கும் பல கற்படுக்கைகள் காணப்படுகின்றன. ஒரு
கல்வெட்டு உள்ளது. இக்குகை ஒரு வீடு போன்றே அமைந்துள்ளது. அதன் ஒரு பகுதியில்
சுவர் போன்று அமைந்திருந்து பின்பு அது சிதைந்திருக்கலாம்.
“கணிய் நந்த அஸிரிய்இ குவ் அன்கே தம்மம்
இத்தாஅ
நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன்
வழுத்திய்
கொடுப்பித்தஅ பளிஇய்”
பொருள்: நந்தஸிரியக்குவன் என்ற கணிக்கு (சமணத்துறவிக்கு)
பாண்டியன் நெடுஞ்செழியனின் அலுவலன் கடலன் வழுதி என்பவன் இக்கற்படுக்கையை அமைத்துக்
கொடுத்தான்.
இரண்டாம் கல்வெட்டு :
“கணிய் நத்திய் கொடிய் அவன்”
பொருள்: நத்திய் என்ற சமணத்துறவி பாறையைச் செதுக்கி படுக்கையாக
அமைத்தார். கொட்டுதல் என்றால் செதுக்குதல் என்ற பொருளில் இங்கு
பயன்படுத்தப்பட்டுள்ளது. நத்திய் என்பவர் சமணத்துறவியாகவும் கல்வெட்டுகளைச்
செதுக்கியவராகவும் இருக்கலாம். ஏனெனில் மற்ற கல்வெட்டுக்களில் இச்சொல்
‘கொடுப்பித்தஅ’ ‘கொடுபிதோன்’ ‘கொடிஓர்’ எனப் பயின்று வருகிறது.
மூன்றாம் கல்வெட்டு :
“கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன்
ஸாலகன்
இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்”
பொருள்: நெடுஞ்செழியனின் சாலகன் (மைத்துனியின் கணவன்)
இளஞ்சடிகனும், அவன் தந்தை சடிகனும் நந்தஸிரியக்குவன் என்ற சமணத்துறவிக்கு
கற்படுக்கைகள் உருவாக்கிக் கொடுத்தனர்.
(மனைவியின் உடன்பிறந்தாள் கணவன் சாலகன் என்று
குறிக்கப்படுகிறான். இதை சலகன் எனவும் படிக்கலாம். இதுவே சகலன் என திரிந்துள்ளதோ
என டாக்டர் இரா.நாகசாமி கருதுகிறார்.)
நான்காம் கல்வெட்டு :
“கணிஇ நதஸிரிய் குவ(ன்) வெள்அறைய் நிகமது
காவிதிஇய்
காழிதிக
அந்தை அஸீதன் பிணஉ கொடுபிதோன்”
பொருள்: வெள்ளறை நிகமத்தைச் சேர்ந்த காவிதி பட்டம் பெற்ற அந்தை
அசுதன் என்ற முத்து வியாபாரி நந்தஸிரியக்குவன்
என்ற சமணத்துறவிக்கு கற்படுக்கைகள் அமைத்துக் கொடுத்தான்.
ஐந்தாம் கல்வெட்டு :
“சந்தரிதன்
கொடுபிதோன்”
பொருள்: சந்தரிதன் என்பவர் கற்படுக்கைகள் அமைத்துக் கொடுத்தார்.
சந்தரிதன் என்பவர் உயர்குடியைச் சேர்ந்தவராக இருக்கலாம்.
ஆறாம் கல்வெட்டு :
“வெள்ளறை
நிகமத்தோர் கொடிஓர்”
பொருள்: வெள்ளறை நிகமத்தைச் சேர்ந்த வணிகக்குழுவினரும்
கற்படுக்கைகள் அமைத்துக்கொடுத்துள்ளனர். வெள்ளறை நிகமம் என்பது வெள்ளறை என்ற
நகரையும் அவ்வூர் வணிகக் குழுவையும் குறிப்பதாகக் கொள்ளலாம். (நிகமம் என்பது
நகரையும் வணிகக் குழுவையும் குறிக்கும்) வெள்ளறை நிகமம் என்பது இவ்வூருக்கு
அருகில் இன்று வெள்ளரிப்பட்டி என்று அழைக்கப்படும் கிராமத்தின் பழைய பெயராக
இருக்கலாம்.
இராமநாதபுரம்
மாவட்டம் அழகன்குளம் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் உள்ள
எழுத்துக்கள் மீனாட்சிபுரம் கல்வெட்டுகளில் காணப்படும் தமிழி எழுத்துக்களை
ஒத்துள்ளதாக டாக்டர் இரா.நாகசாமி குறிப்பிட்டுள்ளார்.
இங்கு
காணப்படும் கல்வெட்டுகளில் தமிழி எழுத்துக்களுடன் பிராகிருதச் சொற்களும் கலந்து
எழுதப்பட்டுள்ளன. ஸிரி, தம்மம், பளி, ஸுதன், நிகமம், கணி ஆகிய பிராகிருதச் சொற்கள்
கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன.
காவிதி
என்பது பாண்டிய மன்னர்களால் வழங்கப்பட்ட பட்டம் ஆகும். இவர்கள் அரசு
அதிகாரிகளாகவரி வசூல் போன்றவற்றைச் செய்துள்ளனர்.
கல்வெட்டுக்களில்
குறிக்கப்படும் நந்தஸிரியக்குவன் என்ற சமணத்துறவி துறவிகளின் தலைவராக
இருந்திருப்பார். கணி என்ற பிராகிருதச் சொல்லுக்கு மூத்த சமணத்துறவி என்று பொருள்.
இதில் குவன் என்ற பெயர் அவரின் இயற்பெயராக தமிழ்ப்பெயராக இருந்து அவர்
துறவியானதும் நந்தஸிரி என்ற துறவிக்குரிய பெயரையும் சேர்த்து நந்தஸிரியக்குவன் என
அவர் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எனவும் ஐராவதம்
மகாதேவன் கருதுகிறார்.
இரண்டு
கல்வெட்டுகளில் குறிக்கப்படும் நெடுஞ்செழியன், சங்கத்தமிழ் இலக்கியங்களில்
பேசப்படும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மற்றும் தலையானங்கானத்து செருவென்ற
நெடுஞ்செழியன் ஆகிய இருவரில் ஒருவராக இருக்கலாம். இக்கல்வெட்டின் காலம் 300 B.C.E. என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மேற்கூறிய இரு
மன்னர்களின் காலம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
மலை அடிவாரத்தில் நல்ல சுவையான தண்ணீர்
ஊற்றுக்கள் உள்ளன. இவை நமது தாகத்தைத் தணிக்கின்றன.
|
தகவலுக்கு நன்றி
ReplyDeletehttp://www.thamizhmozhi.net
கனி நந்தாசிரியன் இயக்கன் என்பவர் ஆசிவக சமயத்தை சார்ந்தவர். பூதபாண்டியனின் படைத்தளபதியாக இருந்து அவரது இறப்பிற்கு பிறகு ஆசிவக மதத்தை பின்பற்றினார், பூதபாண்டியனின் மகனான தலையாளங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் அவரது படைத்தளபதியான கனிநந்தாசிரியன் இயக்கன் என்பவருக்கு கொடுப்பித்த கற்படுக்கை ஆகும்,
ReplyDeleteகூடுதல் தகவலுக்கு நன்றி நண்பரே
Deleteகபதி கடலன் என்று ஈழத்தில் தமிழி சான்று உள்ளதை புஸ்பரட்ணம் நூலில் படித்தேன் , அதுவும் அது ஒரு நாணயம்.
ReplyDeleteகபதி என்பது காவீதி என்று எடுத்த கொள்ள முடியும். பாண்டியன் மட்டும் தான் அந்த அடையாளம் கொடுத்தார்களா?
கடலன் என்ற விளங்கில் அரசனை ஆலம் பேரி சாத்தனார் யானைப் படையை முறியடித்தான் என்றும் அதே மற்றும் ஒரு பாடலில் அவர் பாண்டியன் மன்னன் நெடுஞ் செழியன் போர் வெற்றி குறித்தும் பாடி உள்ளார்.
காவீதி குறித்து விளக்கம் பதில் தாருங்கள்
தெளிவாய் யதார்த்தமாய் முழுமையாய் எடுத்துரைத்துள்ள தகவல்கள் மூலம் படிப்படியாய் மேலேறிச்செல்ல வைக்கிறீர்கள் அறமலைப்பள்ளி மீது . அன்புக்குழந்தைகளோடு அருமையாய் காட்சிப்படுத்துகிறீர்கள் . உள்ளம் நெகிழும் பாராட்டுகள் ராஜகுரு ஐயா
ReplyDelete